ஈழத்தின் அவலமும் தமிழகத்தின் குரல்களும்
- ஷோபாசக்தி
(ஈழப் பிரச்சினையின் இன்றைய நிலை குறித்து, இம்மாத இறுதியில் தமிழகத்தில் வெளிவரவிருக்கும் தொகுப்பு நூலுக்காக எழுதப்பட்ட கட்டுரை.)
சிறிலங்காப் பேரினவாத அரசால் இன்று தமிழ்மக்கள் மீது உச்சக்கட்டத்தில் முடுக்கிவிடப்பட்டிருக்கும் இராணுவத் தாக்குதல்களிற்கு எதிராகவும், சொந்த மண்ணிலேயே ஏதிலிகளாக இரத்தமும் கண்ணீரும் சிந்திக்கொண்டிருக்கும் தமிழ் மக்களிற்கு பரிவும், ஆதரவும் காட்டும் முகமாகவும் கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் எழுச்சிகளையும் நிகழ்வுகளையும் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். மறுபுறத்தில் மகிந்த ராஜபக்ச அரசின் அப்பட்டமான இனவாத அணுகுமுறையையும், மனிதவுரிமை மீறல்களிற்குச் சர்வதேச அளவில் பெயர் பெற்ற இலங்கை அரசபடைகளையும் நியாயப்படுத்திவரும தினமலர், ‘இந்து’ ராம், ‘துக்ளக்’ சோ போன்ற ஊடகக் கிரிமினல்களின் நச்சு வார்த்தைகளையும் நாம் ஆற்றாத கோபத்துடன் கவனித்துக்கொண்டிருக்கிறோம்.
இன்று தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தீவிரமாக ஒலிக்கப்படும் குரல்கள் எல்லாம் ஒருபடித்தானவையல்ல. கம்யூனிஸ்டுகள், ம.க.இ.க போன்ற இடதுசாரிகள் ஈழப் பிரச்சினையை அணுகும் முறைக்கும் தமிழ்த் தேசியவாதிகள், திரைப்படத் துறையினர் போன்றோர் ஈழப் பிரச்சினையை அணுகும் முறைக்கும் இடையே அடிப்படையிலேயே வேறுபாடுகள் உள்ளன. இடதுசாரிகளின் ஈழத் தமிழர்கள் மீதான அக்கறை அவர்களின் அரசியல் நிலைப்பாட்டிலிருந்தும் ஈழப் பிரச்சினை குறித்த வரலாற்று அறிவிலிருந்தும் பிறக்கின்றன. தமிழ்த் தேசியவாதிகள், திரைப்படத்துறையினர் போன்றோரின் ஈழத் தமிழர்கள் மீதான அக்கறை இனவுணர்வு முழக்கங்களிலிருந்தும், வெற்று மனிதாபிமானத்திலிருந்தும், ஈழப் பிரச்சினை குறித்த வரலாற்று அறிவின்மையிலிருந்தும், விடுதலைப் புலிகள் மீதான பிரமைகளிலிருந்துமே பெரும்பாலும் பிறக்கின்றன.
பெரியவர் நெடுமாறன், வைகோ போன்றவர்களின் மழுங்கிப்போன, அரசியல், சமூகம் குறித்துக் கூரிய பார்வைகளற்ற வெறும் உணர்ச்சிப் பெருக்கெடுக்கும் உரைகள் நமக்கு இருபது வருடங்களாகவே பழகிப்போனவைதான். அந்த உரைகளும், அவர்களின் தமிழ்த் தேசிய ஆதரவு அரசியலும் ஈழப் பிரச்சினையைப் பொறுத்தளவில் தமிழகத்திலோ ஈழத்திலோ குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றங்களைச் சாதித்தவையல்ல. செய்யாத ஒன்றுக்காகச் சிறை சென்ற நிரபராதிகள் அவர்கள். இன்றைய திரைப்படத் துறையினர் கலை நிகழ்ச்சி நடத்தி கார்கில் யுத்தத்திற்கு பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டியதிலிருந்து காவேரி நதி நீர்ப் பிரச்சினையில் நடத்திய போராட்டங்கள் வரையான செய்திகளை வர்த்தக விளம்பர நிகழ்ச்சிகளுக்கு இடையிடையே துண்டுக் காட்சிகளாகத் தொலைக்காட்சியில் நாம் பார்த்திருக்கிறோம். திரைப்படத்துறையினரின் இந்த ஈழப் பாசத்துக்குப் பின்னாலிருப்பது புகலிட ஈழத்தமிழ் ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் கொழுத்த இலாபமே என்ற விமர்சனங்களையும் நாம் கவனத்தில் எடுக்கத்தான் வேண்டியிருக்கிறது. ஒட்டுமொத்தத் திரைப்படத் துறையினரையும் நாம் இப்படிக் கொச்சைப்படுத்திவிட முடியாது என்ற போதிலும் இந்த விமர்சனத்தில் பகுதியளவு உண்மைகள் இல்லாமலில்லை. நடிகர் அஜித்குமார் உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்குபெற மறுத்ததாகச் செய்தி வந்ததும் புகலிட நாடுகளில் அவரின் புதிய திரைப்படமான ‘ஏகன்’ காட்சிகள் ரத்துச் செய்யப்பட்டதும் அதைத் தொடர்ந்து அவர் போராட்டத்தில் கலந்துகொண்டு விறைப்பாய் இருந்ததும் நினைவுக்கு வருகிறது. திரைப்படத் துறையினரின் சமூக உணர்வும், மனிதாபிமானமும், வீராவேசச் சவால்களும், ‘பஞ்ச்’ டயலாக்குகளும் கூட அவர்கள் உருவாக்கும் சினிமாக்களில் நாம் கண்டு ரசித்தவைதாம். ஆனால் ஈழப் பிரச்சினை குறித்துக் கருத்துரைக்கும் தமிழகத்தின் எழுத்தாளர்களதும் நூற்றுக்கணக்கான வலைப்பதிவாளர்களினதும் கருத்துகளைப் படிக்கும்போது நமக்குத் ‘திக்’கென்றிருக்கிறது. ஈழப் பிரச்சினை குறித்த வரலாற்று அறிவின்மை மட்டுமல்லாமல் ஈழத்தில் சமகாலத்தில் நடக்கும் சம்பவங்கள் குறித்த தெளிவின்மையும் அவர்களிடம் விரவிக் கிடக்கிறது. நாஞ்சில் நாடன் போன்ற சமூகப் பொறுப்புணர்வுமிக்க மூத்த எழுத்தாளர்கள் கூடத் தவறான தகவல்களின் அடிப்படையில் தங்கள் கருத்துகளைக் கட்டியெழுப்ப நேரிடுகிறது.
இருவாரங்களுக்கு முன்பு ‘ஆனந்தவிகடன்’ இதழில் ஈழம் குறித்து நாஞ்சில் நாடன் எழுதிய கட்டுரையில் “இந்தியாவில் நடைமுறை என்னவாயிருந்த போதிலும் சட்டத்தைப் பொறுத்தளவில் ஒரு தமிழர் பிரதமராக வருவதற்குத் தடைகளில்லை. ஆனால் இலங்கையில் ஒரு தமிழர் பிரதமராக வருவதை அரசியல் சாசனமே மறுக்கிறது” என்று எழுதியிருந்தார். இது ஒரு தவறான கூற்று. இந்தக் கூற்றைச் சற்று நாட்களுக்கு முன்பு இராமேஸ்வரப் பேரணியில் இயக்குனர் சீமான் சொல்லிவைத்தார். நாஞ்சில் நாடன் அதை அப்படியே நம்பியிருக்க வேண்டும். இலங்கையின் அரசியல் சாசனத்தில் தமிழர் ஒருவர் பிரதமராக வருவதற்கு எதுவித தடைகளும் கிடையாது. ஆக இலங்கையிலும் நடைமுறை எதுவாயிருந்தபோதிலும் சட்டத்தைப் பொறுத்தளவில் பிரச்சினை கிடையாது.
அதேபோல தமிழின் முதன்மை அறிவுஜீவிகளில் ஒருவரும் சட்ட மன்ற உறுப்பினருமான ரவிக்குமார் கடந்த ‘ஜுனியர் விகடன்’ இதழில் “இராணுவ இலக்குகளைத் தவிர பொதுமக்களைத் தாக்குவதில்லை என்ற சுயகட்டுப்பாட்டுடன் புலிகள் இயங்குகிறார்கள்” என எழுதியிருந்தார். ஈழத்து எழுத்தாளர்களுடன் நீண்டகாலமாகவே நெருக்கமான தொடர்பைப் பேணிவரும் ரவிக்குமார் போன்றவர்களே இப்படியாக அநியாயத்திற்குப் புலிகளுக்கு வக்காலத்து வாங்குவது கவலைக்குரியது. இது வெறுமனே வக்காலத்து மட்டுமல்ல, புலிகளால் கொல்லப்பட்ட அப்பாவிப் பொது மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம்.
‘டொலர்’, ‘கென்’ பண்ணைகளில் தொடங்கி அநுராதபுரம், உலக வர்த்தக மையம், இலங்கை மத்திய வங்கி, தலதா புத்த கோயில், காத்தன்குடி மற்றும் ஏறாவூர் மசூதிகள் எனப் பொதுமக்களைப் புலிகள் குறிவைத்துத் தாக்கிய சம்பவங்கள் எத்தனையெத்தனை. இவை குறித்து சி. புஸ்பராஜாவின் ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ நூலில் விரிவான பட்டியலே தேதி விபரங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. கெப்பற்றிக்கொலாவில் பொதுமக்கள் பேருந்துக்குள் குண்டு வைத்து 64 பொதுமக்களைப் புலிகள் கொன்றதையும் இந்த வருடம் மே மாதம் 16ம் தேதி மோட்டார் சைக்கிளில் வந்த புலிகளின் மனித வெடிகுண்டு கொழும்பு கோட்டைப் பேருந்து நிலையத்திற்குள் வெடித்துப் பத்துப்பேரைக் கொலைசெய்ததைம் மே 26ம் தேதி தெஹிவள புகையிர நிலையத்தில் புலிகள் வைத்த குண்டால் ஒன்பதுபேர்கள் கொல்லப்பட்டதையும் ரவிக்குமாரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். இங்கே நான் குறிப்பிடும் சம்மவங்கள் வெறும் எடுத்துக்காட்டுகள்தாம். ஒவ்வொரு நாளும் எல்லைப் புறங்களில் அப்பாவிச் சிங்களக் கிராமவாசிகள் புலிகளால் கொல்லப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்.
இவற்றையெல்லாம் நான் இங்கே அழுத்திச் சொல்வதற்குக் காரணம் இலங்கையின் அரசியல் சாசனத்தையே தவறாக மேற்கோள் காட்டுமளவிற்கு வரலாற்று அறிவின்மையும், சமகால விவகாரங்களில் ஒருபக்கப் பார்வையும், சங்ககாலப் பெருமிதங்களை உருப்போடுதலும், அரசியல் நீக்கம் செய்யப்பட்ட வெறும் அனுதாபக் குரல்களும், உச்சுக்கொட்டல்களும் தமிழர்கள் மீதான படுகொலைகளால் கொதித்துப் போயிருக்கும் உள்ளங்களை ஒருகணம் ஆற்றுப்படுத்தாலாம். ஆனால் இந்தப் போக்கு ஒரு அரசியல் போக்காக உருவெடுக்கவோ, அல்லது இலங்கை - இந்திய அரசுகளை மயிரளவேனும் அசைத்துவிடவோ வலுவற்றது.
ஈழப் போராட்டம் உக்கிரமடைந்த காலத்திலிருந்தே யுத்தத்தை எதிர்த்தும், தமிழர்களையும் மற்றைய சிறுபான்மையினரையும் உள்ளடங்கிய அதிகாரப் பகிர்வு குறித்தும் பேசிவரும் தமிழகத்து இடதுசாரிக் கட்சிகள் மற்றும் இடது அறிவுத்துறையினரின் குரலுக்கும்; புலிகள் போரில் பின்னடைவைச் சந்திக்கும் போது யுத்த நிறுத்தத்தைக் கோரியும், புலிகள் போரியல் வெற்றிகளைச் சாதிக்கும்போது போர் வெற்றியைக் கொண்டாடியும் வரும் தமிழ்த் தேசியர்களின் போக்குக்கும் உள்ள அடிப்படை வித்தியாசங்கள் தெளிவானவை. போரில் ஏற்ற இறக்கங்களை அரசும் புலிகளும் மாறி மாறிச் சந்திந்தாலும் தமிழ் மக்கள் இந்தப் போரால் கடந்த முப்பது வருடங்களாக இறக்கங்களை மட்டுமே சந்தித்துவருகிறார்கள். போரின் வீச்சு தமிழ் மக்களைப் பாதிப்பதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. போர் இசுலாமியச் சமூகத்தை நோக்கியும் சிங்களச் சமூகத்தை நோக்கியும் தன் அழிவுக் கரங்களை ஆழமாகவே வீசியிருக்கிறது. யுத்தத்தால் வீங்கிப்போன பாதுகாப்புச் செலவீனங்களை நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் விலைவாசி உயர்வாகவும் வரிகளாகவும் தங்கள் முதுகுகளில் சுமக்கிறார்கள்.
2
நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் தருணத்தில் சிங்களக் கிராமங்களில் இலங்கை அரசு ‘பூநகரி’ வெற்றி விழாவை நடத்திக்கொண்டிருக்கிறது. புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் கேந்திர முக்கியத்தும் வாய்ந்த கிளிநொச்சிப் பகுதியை நோக்கி மூன்று தடங்களில் இலங்கை இராணுவம் முன்னேறிக்கொண்டிருக்கிறது. புலிகளை ஒழிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு அரச படையினர் பொதுமக்கள் குடியிருப்புகள் மீது குண்டுகளை வீசி வகைதொகையற்று மக்களைக் கொன்றொழித்துக்கொண்டிருக்கிறார்கள். நீண்ட காலமாகவே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கான தரைவழித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் வன்னியில் பசியும் பட்டினியும் தலைவிரித்தாடுகின்றன. சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் அரசால் யுத்தப் பிரதேசங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டன. முன்னேறிச் செல்லும் இராணுவத்தினரின் பீரங்கிகளின் வாய்களுக்குப் புலிகள், பொதுமக்கள் என்ற வித்தியாசங்கள் ஏதுமில்லை. பிணங்களை ஏறி நெரித்துக்கொண்டு அவை நிலங்களை கைப்பற்றுகின்றன.
கொழும்பில் நடந்து முடிந்த ‘சார்க்’ மாநாட்டின் போது மாநாட்டை ஒட்டிப் பத்து நாட்கள் யுத்த நிறுத்தம் செய்வதாகப் புலிகள் அறிவித்த போதிலும் அரசு யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. ஈழப் போராட்டத்தின் வரலாற்றிலேயே முதற் தடவையாக ஒரு யுத்த நிறுத்தத்திற்குச் சம்மதிக்க அரசு மறுத்த சம்பவமது. யுத்தத்தில் வெற்றிகளை அரசு ருசிக்கத் தொடங்கியிருந்த காலமது. இன்று யுத்த நிறுத்தத்திற்குத் தயாரென்றும் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாரென்றும் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் நடேசன் அறிக்கைக்கு மேல் அறிக்கை வெளியிட்டவாறேயிருக்கிறார். போரியல் வெற்றிகளால் இராணுவம் திகட்டிப் போயிருக்கும் காலமிது. மகிந்த ராஜபக்ச யுத்தத்தின் மூலமே தீர்வு என்பதில் உறுதியாயுள்ளார். கடந்த காலங்களைப்போல ‘அனைத்துக் கட்சிக் குழு’, ‘தீர்வுப் பொதி’ என்றெல்லாம் இப்போது அவர் முணுமுணுப்பது கூடக் கிடையாது. நாட்டில் விசுவரூபம் எடுத்து நிற்கும் இனவாத அரசியலை அவர் வோட்டுகளாக மாற்றிக்கொண்டிருக்கிறார். அடுத்த அதிபர் தேர்தலில் தனது வெற்றிக்கான அத்திவாரத்தை ராஜபக்ச தமிழர்களின் வீடுகளுக்கு நடுவே விமானங்களால் தோண்டிக்கொண்டிருக்கிறார்.
இன்று அரசின் நிழலில் நின்றுகொண்டு அரசியல் பேசும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரியும் EPDP, PLOTE, TMVP போன்ற தமிழ் இயக்கங்களும் இந்தப் போரை வலுவாக ஆதரிக்கிறார்கள். அரசியல் பரப்பிலிருந்து புலிகளைப் பூண்டோடு கிள்ளியெறிய வேண்டுமென்பது அவர்களது நிலைப்பாடு. புலிகளால் வஞ்சிக்கப்பட்ட, அழித்தொழிக்கப்பட்ட இந்த இயக்கங்களின் கோபத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் புலிகள் பொதுமக்களையும் மாற்று இயக்கத் தலைவர்களையும் கொல்லும்போது இந்த இயக்கங்களிடம் பொங்கிப் பிரவகித்த மனிதவுரிமைகள் மீதான கரிசனையும் அராஜகத்திற்கு எதிரான குரலும் எப்போதுமே அரச இயந்திரத்தின் முன்னே மண்டியிடுவதைத்தான் சகித்துக்கொள்ள முடியில்லை. பொதுமக்கள் மீது அரசு நடத்தும் படுகொலைகளுக்காக அரசைக் கண்டிக்கவோ அவற்றைத் தடுத்து நிறுத்தவோ இவர்களுக்குத் துப்பில்லை. இயக்கம் நடத்துவதற்கு அடுத்த மாதத்திற்கான செலவை பொதுமக்களா கொடுக்கப் போகிறார்கள். அரசிடமிருந்துதானே இவர்கள் அந்தச் செலவுத் தொகையை நத்திப் பெறவேண்டியிருக்கிறது.
இன்றைய புலிகளின் நிலையைக் குறித்துப் பேசுவதற்கு முதல் தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக் காலமான எண்பதுகளின் தொடக்கப் பகுதியை சற்றுத் திரும்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக 1983 யூலை வன்முறைகளைத் தொடர்ந்து நாட்டின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இனவாத அரசுக்கு எதிராகத் திரண்டுவந்த மக்களின் உணர்வும் அது வழியே தமிழ்த் தேசிய விடுதலை இயககங்களுக்குக் கிடைத்த பேராதரவும் வரலாற்றுத் திருப்பங்கள். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் உயிர்களை வெள்ளித் தட்டில் வைத்து இயக்கத் தலைமைகளிடம் ஒப்படைத்தார்கள். ‘எங்கும் சுதந்திர மென்பதே பேச்சு’ என்ற பாரதியின் சொற்கள் ஈழப் புலத்தில் செயலாய் நிமிர்ந்த காலமது. அரசியல் தெளிவீனங்கள், இயக்கங்களின் சகோதர உரசல்கள், ஈழப் போராட்டத்தின் மீது இந்திய வல்லாதிக்க அரசின் மேலாண்மை போன்ற பலவீனங்களுக்கு அப்பாலும் பரந்துபட்ட மக்கள் திரள் பேரினவாத அரசுக்கு எதிராகவும் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காகவும் சொல்லொணா அர்ப்பணிப்பு உணர்வுடன் அணிவகுத்த காலமது. அந்த எழுச்சியில் ஆயிரம் வருடங்களாக அசைக்க முடியாமல் கெட்டிதட்டிப் போயிருந்த சாதியக் கலாச்சாரம் கூடக் கொஞ்சம் நெகிழப் பார்த்தது. அந்த எழுச்சி கிடுகு வேலிக் கலாச்சாரத்துக்குள் சிறையுண்டிருந்த ஒருதொகைப் பெண்களை அரசியல் வெளிகளுக்கு அழைத்து வந்தது. அந்த மக்கள்சக்தி அலாவுதீனின் அற்புத விளக்கு.
நமது போராளி இயக்கத் தலைமைகளின் தவறுகளால் அந்த விளக்கு வீடு கொழுத்தத்தான் பயன்பட்டது. விடுதலை இயக்கங்கள் தங்களை மக்களிலிருந்து வேறுபட்ட சிறப்பு உயிரிகளாகக் கருதினர். மக்களால் தங்கத் தாம்பாளத்தில் வைத்து வழங்கப்பட்ட அதிகாரத்தைக் கொண்டே அவர்கள் மக்களை நாட்டாமை செய்தார்கள். மக்களை அரசியல் மயப்படுத்தவோ, அரசியல் சக்திகளாக்கவோ அவர்கள் முயலவில்லை. மக்களை இயக்கத்திற்கு வளங்களை வழங்கும் ‘சப்ளையர்’களாக மட்டுமே அவர்கள் பார்த்தார்கள். இயக்கங்களின் அரசியல் கொள்கைகள் தமிழ் மக்களைப் பாதுகாப்பது என்பதில் தொடங்கி, தங்கள் இயக்கத்தைப் பாதுகாப்பதாகத் தேய்ந்து, இயக்கத் தலைமைகளைப் பாதுகாக்கும் ஆராதிக்கும் கொள்கைகளாகச் சிறுத்தன. தம்பி பிரபாரகன் ‘தேசியத் தலைவரா’கவும் தோழர் உமாமகேசுவரன் ‘பெரியய்யா’ ஆகவும் வீங்கிப்போயினர்.
1986ல் விடுதலைப் புலிகள் மற்றறைய இயக்கங்களைத் தடைசெய்துவிட்டு நாட்டாமைகளுக்கெல்லாம் நாட்டாமை ஆனார்கள். தட்டிக் கேட்க ஆளில்லாததால் ‘தம்பி’ சண்டப்பிரசண்டர் ஆனார். ஒரு கெரில்லாத் தாக்குதலுக்கு நூறு அரசியல் தவறுகள் என்ற ரீதியில் ஈழப் போராட்டம் சீரழியத் தொடங்கியது. அ. அமிர்தலிங்கம் கொலை, முஸ்லீம்களைக் கட்டிய துணியுடன் துரத்தியது, ராஜீவ்காந்தி கொலை, பள்ளிவாசல் படுகொலைகள், என்று எண்ணற்ற பாரிய அரசியல் தவறுகள் புலிகளால் இழைக்கப்பட்டன. மக்கள் மீது அடக்குமுறைச் சட்டங்களும் வரிவிதிப்புகளும் புலிகளால் அவிழ்த்துவிடப்பட்டன. பள்ளிச் சிறுவர்களும் குழந்தைகளும் கட்டாயமாகப் புலிகள் இயக்கத்துக்குப் பிடித்துச் செல்லப்பட்டார்கள். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து மக்கள் வெளியேறுவது கட்டாயமாகக் கட்டுப்படுத்தப்பட்டது. புலிகளின் இயக்கத்தின் அடாவடி அரசியல் புலம்பெயர்ந்த நாடுகளிலிருக்கும் அகதிகளையும் விட்டு வைக்கவில்லை. அய்ரோப்பாவிலும் கனடாவிலும் மிரட்டிப் பணம் பறித்தல், வன்முறைகள் மூலம் மாற்று அரசியல் கருத்துள்ளவர்களை அடக்க முயற்சிப்பது போன்ற செயல்களில் புலிகளின் அணிகள் இறங்கின.
இந்தப் பாஸிசச் செயற்பாடுகளால் சொந்த மக்களிடையே கணிசமான ஆதரவை இழந்தது மட்டுமல்லாமல் சர்வதேசச் சூழலிலும் புலிகள் இயக்கம் கடும் கண்டனங்களைச் சந்திக்க நேரிட்டது. இந்தியாவிலும் பிரித்தானியாவிலும் அய்ரோப்பிய யூனியனிலும் அமெரிக்காவிலும் கனடாவிலும் அவுஸ்திரேலியாவிலும் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாக முத்திரை குத்தப்பட்டு தடைசெய்யப்பட்டது. இந்த நாடுகளில் புலிகளின் நடவடிக்கைகள் பெருமளவில் முடக்கப்பட்டன. எல்லா நாட்டுச் சிறைகளிலும் புலிகளின் உறுப்பினர்கள் அடைக்கப்பட்டார்கள். ஒன்றரை வருடங்களுக்கு முன்பு பிரஞ்சு அரசாங்கத்தால் கைது செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் இன்றுவரை விடுவிக்கப்படவில்லை. சர்வதேச அரசுகளின் இந்தச் செயற்பாடுகள் விரிந்து கூட்டம் கூடும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மறுக்குமளவிற்குக் கூட சர்வதேச அரசுகளின் பிடி இறுகிவருகிறது. சென்ற மாதம் பிரான்ஸில் விடுதலைப் புலிகளின் ஆதரவு அணிகளால் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலத்திற்கு பொலிஸாரால் அனுமதி மறுக்கப்பட்டது. சர்வதேச அரசுகளின் இந்த நடவடிக்கைகள் முற்று முழுதாகச் சரியானவை எனபதல்ல நான் சொல்ல வருவது. இந்தச் சர்வதேச வல்லாதிக்க அரசுகளின் அரசியல் கயமைத்தனங்களையும் காலனிய மனோபாவத்தையும் நாம் அறிவோம். புலிகள் மீதான வல்லாதிக்கவாதிகளின் பிடிகள் இறுகி வருவதை விளக்கவே மேலுள்ளவற்றைச் சொல்ல நேரிட்டது.
இன்று எல்லாவிதப் புறநிலைகளும் அரசியல் ரீதியாகவும் சரி, இராணுவ ரீதியாகவும் சரி புலிகளுக்குப் பாதகமாகவேயுள்ளன. இந்த அழிவைப் புலிகளின் குறுந்தேசிய பாஸிச வேலைத்திட்டமும், அவர்களின் சகிப்பின்மையுமே அவர்களுக்குத் தேடிக்கொடுத்திருக்கிறது. சிங்கள இனவாத அரசுக்கு எதிரான மக்களின் வீரஞ் செறிந்த எழுச்சியைச் சிதைத்து, விடுதலை அரசியலை வெறுமனே இராணுவவாதமாகத் திருப்பிச் சீரழித்து, மாற்று அரசியல் குரல்களை ஒடுக்கி, ஒரு போராட்டத்தைத் தோற்றதில் விடுதலைப் புலிகளுக்கே முதன்மையான பங்கிருக்கிறது.
எனினும் இத்தனை சீரழிவுகளிற்குப் பின்னும் ஒருதொகை மக்களிடையே புலிகளுக்கான ஆதரவு இருக்கத்தான் செய்கிறது. புலிகளின் பல்வேறு செயல்களால் அதிருப்தியுற்றிருந்தாலும் இலங்கைப் பேரினவாத அரசின் கொடுமைகள் வழியாக அவர்கள் புலிகளை ஆதரிக்கும் நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். விடுதலைப் புலிப் போராளிகளின் போர்க் குணாம்சமும் அர்ப்பணிப்பு உணர்வும் குறைத்து மதிப்பிடப்படக் கூடியவையும் அல்ல. ஆனால் இத்தகைய மக்கள் ஆதரவாலும் போராளிகளின் அர்ப்பணிப்பு உணர்வாலும் கூட வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியாது. ஏனெனில் புலிகளின் வீழ்ச்சி ஆள் பற்றாக்குறையால் உருவானதல்ல. அது அவர்களின் பிற்போக்குவாத அரசியல் வேலைத் திட்டத்திலிருந்து உருவானது.
3
இலங்கைக்கும் இந்தியாவுக்குமுள்ள அரசியல் உறவுகள் பாரம்பரியமுள்ளவை அதே நேரத்தில் சிடுக்குகள் கொண்டவை. சுதந்திர இலங்கையில் இந்திய இராணுவம் இருதடவைகள் கால் பதித்துள்ளது. இருதடவைகளும் இந்திய இராணுவம் இலங்கை மண்ணில் இரத்தச் சுவடுகளையே விட்டுச் சென்றது. ஜேவிபி நடத்திய 1971 ஏப்ரல் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக வந்த இந்திய இராணுவத்தின் துணையுடன் அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசு பத்தாயிரம் சிங்கள இளைஞர்களை வீதிகளிலும் களனி ஆற்றின் கரைகளிலும் கொன்றொழித்தது. 1987ல் இலங்கைக்கு வந்த இந்திய அமைதிப்படையினர் கொன்ற உயிர்களுக்கும் அவர்களால் பாலியல் சித்திரவதை செய்யப்பட்ட பெண்களுக்கும் அடித்த கொள்ளைக்கும் கொழுத்திய வீடுகளிற்கும் கணக்கே கிடையாது. முன்றாவது தடவையும் நாம் மொக்கயீனப்பட முடியாது.
வங்கப் பிரச்சினையில் இந்தியா தலையீடு செய்ததை உதாரணம் காட்டி இன்று நமது திரைப்பட நடிகர்கள் உணர்ச்சிவசப்படுவதையும் அதை காணொளியாகத் தரவிறக்கம் செய்து தமது வலைப்பதிவுகளில் போட்டு நமது வலைப்பதிவாளர்கள் அடிக்கும் கூத்தையும் பார்த்தால் பரிதாபமாயுள்ளது. நண்பர்களே திரைப்படத்தில் வைப்பது போல வரலாற்றிலெல்லாம் சுலபமாக ‘பிளாஷ் பேக்’ வைத்துவிட முடியாது.
வங்கப் போராட்டத்தின் போதிருந்த இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளும் இன்றிருக்கும் வெளியுறவுக் கொள்கைகளும் முற்றிலும் வேறானவை. சோவியத் யூனியன் உடைவிற்கு முன்னான சர்வதேச அரசியல் சூழுலும் இன்றிருக்கும் அரசியல் சூழலும் வேறுவேறானவை. அணிசேராக் கொள்கையென்று நெஞ்சு நிமிர்த்தி நின்ற இந்தியா வேறு. அமெரிக்காவுக்குப் பணிந்து அணு ஒப்பந்த அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்திருக்கும் இன்றைய இந்திய அதிகார வர்க்கம் வேறு. இன்று இந்தியப் பெரும் முதலாளிகளின் முதலீடுகள் இலங்கையில் வடக்கில் காங்கேசன்துறையிலிருந்து தெற்கே மாத்தறை வரை குவிந்துள்ளன. இலங்கை கேள்வி கேட்பாரன்றிச் சூறையாடக் கூடிய ஒரு நிலமாக இந்தியப் பெருமுதலாளிகளுக்கு ‘செட்’ ஆகியிருக்கிறது. ஜெயவர்த்தனா காலத்திலிருந்தது போலவோ பிரேமதாஸ காலத்திலிருந்தது போலவோ. இன்று இரு நாடுகளுக்குமிடையில் ஒரு முறுகல் நிலமையும் கிடையாது. பொதுவாகவே சிறிமாவின் காலத்திலிருந்தே சிறிலங்கா சுதந்திர கட்சிக்கும் இந்திய அரசுக்குமிடையில் ஒரு இணக்கம் இருப்பதையும் நாம் அறிவோம். நடுவில் அந்தத் ‘துன்பியல் சம்பவமும்’ நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் புறச்சூழல்களைக் கவனத்தில் எடுக்காமல் வங்கம், கச்சத்தீவு என்றெல்லாம் நாம் வாய்ப்பாடு ஒப்பித்துக்கொண்டிருக்க முடியாது.
இந்திய அதிகாரவர்க்கமல்ல வேறு எந்த அதிகார வர்க்க ஆட்சியாளர்களும் தங்கள் சொந்த வர்க்க நலன்களை முன்னிறுத்தாமல் ஒரு குண்டூசியைக் கூட அசைப்பதில்லை. ஆக நமது எழுச்சியாளர்கள் ஒருநாள் உண்ணாவிரதத்தாலோ ஒரு ஊர்வலத்தாலோ இலங்கைக்கு ஆயுதங்களையும் ராடர்களையும் வழங்காமல் இந்திய அரசைத் தடுத்துவிட முடியும் என்று நிச்சயமாகவே எண்ணமாட்டார்கள். ஆனால் அவர்கள் இலங்கைக்கு இந்தியா ஆயுதமும் ராடர்களும் வழங்கும் செய்தி இன்றுதான் தமக்குத் தெரிய வந்ததுபோல மேடையில் போடும் அதிர்ச்சி நாடகம்தான் சகிக்க முடியாமலிருக்கிறது. இந்தியா இலங்கைக்கு முப்பது வருடங்களுக்கு மேலாக ஆயுதம் வழங்கிக்கொண்டுதானிருக்கிறது. இந்திய இராணும், இலங்கை இராணுவத்துடன் மட்டுமல்லாமல் அமெரிக்க இராணுவத்துடனும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டுதானிருக்கிறது. இன்று இலங்கையில் கொல்லப்படும் ஒவ்வொரு அப்பாவித் தமிழர் குறித்த விபரமும் நமக்குத் தெரிகிறதோ இல்லையோ இந்திய அதிகார வர்க்கத்துக்குத் துல்லியமாகத் தெரிந்திருக்கிறது. அதுபோலவே கடலில் கொல்லப்படும் மீனவர்கள் விவகாரம் குறித்து இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் பரஸ்பரப் புரிந்துணர்வு உள்ளது.
எனவேதான் இந்தச் சூழலில் ‘இந்திய அரசே ஈழத் தமிழர்கள் மீது இரங்கு’ என்ற கோரிக்கை அல்லது ‘இலங்கைக்கு ஆயுதங்களை வழங்காதே’ என்ற ஒருநாள் கண்டனங்களால் நம்மால் எதுவும் சாதித்துவிட முடியாது. ஒடுக்கப்படும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான தமிழகத்துக் குரல்களை அரசியல்ரீதியாக அணிதிரட்ட வேண்டும். அந்த அரசியல் போக்கு வெறுமனே இலங்கை அரசின் ஒடுக்குமுறைகளை மட்டும் கவனத்தில் எடுத்துக்கொண்டு புலிகளினதோ அல்லது மற்றைய இயக்கங்களினதோ மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டும் காணாமலும் விட்டுச் செல்லக்கூடாது. குறிப்பாக ஈழப்புலத்தில் நிலவும் கடுமையான சாதிய முரண்கள், கிழக்கு மற்றும் இசுலாமியரின் அரசியல் சுயாதீனம் போன்ற ஈழத்தின் அடிப்படையான அரசியல் விடயங்களிலும் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய ஈழ அரசியலின் அடிப்படைகளைக் கவனத்தில் எடுப்பதின் மூலம்தான் ஒடுக்கப்படும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான சரியான, தார்மீகப் பலம்கொண்ட அரசியல் போக்கைத் தமிழகத்தில் உருவாக்க முடியும். குறிப்பாக இலங்கை அரசுக்குப் போர்க் கருவிகளை வழங்கும் பிரச்சினையில் நடுவண் அரசிடம் கெஞ்சிக் கேட்கும் போக்கில்லாமல் முண்டி நிற்கும் தைரியம் வேண்டும். அதற்கு அமைப்புரீதியான பலம் வேண்டும். கடந்த மூன்று தசாப்தங்களாகத் தமிழக மக்கள் ஈழத் தமிழர்கள் மேல் காட்டிவந்த கரிசனை மறக்க முடியாதது. ஆனால் அந்தக் கரிசனை மனிதாபிமான உதவிகள் என்றளவில் ஒருபுறம் தேங்கிக்கிடக்க மறுபுறத்தில் வெறும் புலி ஆதரவாகச் சீரழிந்து கிடக்கிறது. இந்த இரு போக்குகளாலும் ஈழத்து அரசியலிலோ அல்லது ஈழத்துப் பிரச்சினையில் தொடர்ந்து அடாத்துப் பண்ணிக்கொண்டிருக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளிலோ ஒரு துரும்பளவு மாற்றத்தைக்கூட ஏற்படுத்த முடியவில்லை என்பதே கடந்த கால வரலாறு சொல்லும் உண்மை. தோழர்கள் புதியன சிந்திக்க வேண்டும்.
4
இன்று உக்கிரமாக நடந்துகொண்டிருக்கும் இந்த யுத்தத்தை நிறுத்தித் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளப் புலிகள் விரும்புகிறார்கள். இலங்கை அரசோ புலிகளை ஒழித்துக்கட்டிவிட்டுத்தான் மறுவேலை என்பதாகப் போரை அவிழ்த்துவிட்டிருக்கிறது. விடுதலைப் போராட்டங்களையும் ஒடுக்கப்படும் இனங்களின் தேசிய எழுச்சிகளையும் பயங்கரவாதமாக இந்திய அரசு முதற்கொண்டு மேற்கு வல்லரசுகள்வரை சித்திரிக்கின்றன. நியாயமான எழுச்சிகளையே பயங்கரவாதமாகச் சித்திரிக்கும் அந்த வல்லாதிக்கவாதிகளுக்குப் புலிகளைப் பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கும் வேலையைப் புலிகள் வைக்கவில்லை. புலிகள் தங்கள் தலையில் தாங்களே மண்ணைப் போட்டுக்கொண்டவர்கள். தமிழ், சிங்கள, முஸ்லிம் பொதுமக்கள் மீதான அவர்களின் கூட்டுப் படுகொலைகள், இலங்கையிலும் சர்வதேசப் பரப்புகளிலும் அவர்கள் செய்த அரசியற் படுகொலைகள், புகலிட நாடுகளில் வாழும் அகதித் தமிழர்கள் மீது மேற்கு அரசுகளின் சட்டங்களையும் மீறிப் புலிகள் கொடுத்த தொல்லைகள் போன்ற எண்ணற்ற காரணிகளால் ஒரு விடுதலை இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாகப் பரிணமிக்க வைத்தவர்கள் அவர்கள். எனவே புலிகளை அழித்தொழிக்கும் இலங்கை அரசின் இன்றைய யுத்தத்திற்கு சர்வதேச வல்லாதிக்க சக்திகள் தங்களது முழு ஆதரவையும் வழக்குகின்றன. யார் இலங்கை அரசுக்கு அதிகமான இராணுவத் தளவாடங்களைத் தர்மம் செய்வதென்பதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிற்குள் ஒரு ‘தர்ம’யுத்தமே நடகக்கிறது.
அரசு - புலிகள் - சர்வதேச அரசுகள் என்ற முக்கோணச் சிக்கலுக்குள் ஈழத்தமிழர்கள் சிறையிருக்கிறார்கள். புலிகளிடமிருந்து இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் உடனடி யுத்த அபாயங்களும் புலிகளின் அடக்குமுறைகளும் இல்லாமலிருக்கலாம். ஆனால் அந்தப் பிரதேசங்களில் நடப்பது இனவெறி பிடித்த ஒரு இராணுவத்தின் இராணுவ ஆட்சி. கடந்த பதின்முன்று வருடங்களாக இராணுவத்தின் பிடியிலிருக்கும் யாழ்ப்பாணத்தில் கொலைகள் விழாத நாளே கிடையாது. இன்று அந்தப் பகுதியில் இளைஞர்களுக்குச் சிறைச்சாலை ஒன்றே பாதுகாப்பை உறுதி செய்யும் இடமாயிருக்கிறது. தாய்மார்கள் தாங்களாகவே தமது பிள்ளைகளை அழைத்துவந்து சிறையில் அடைத்து வைக்குமாறு அதிகாரிகளை இரக்கிறார்கள்.
இராணுத்தால் கைப்பற்றப்பட்ட கிழக்கில் மகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டு முதல்வரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அங்கேயும் விமானக் குண்டுவீச்சுகள், ஷெல் வீச்சுகள் போன்ற உடனடி யுத்த அபாயங்கள் குறைக்கப்பட்டிருந்தாலும், புலிகளின் கட்டாய பிள்ளைபிடி போன்ற அபாயங்கள் இல்லாதிருந்தாலும் அங்கே அதிகாரத்தில் இருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்குள் (TMVP) நடக்கும் குத்துவெட்டுகளாலும் கொலைகளாலும் கிழக்கு அதிர்கிறது. அண்மையில் ரகு என்ற அந்த அமைப்பின் முக்கிமான தலைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஏற்கனவேயுள்ள நூற்றுக்கணக்கான கொலைப் பழிகளுடன் இந்தக் கொலைப் பழியும் கருணாவுக்கே சேர்ந்திருக்கிறது. ஆயுதப் போராட்டம் என்ற கொள்கையைக் கைவிட்டு TMVP சனநாயக அரசியல் நெறிகளுக்கு திரும்பித் தேர்தலில் பங்கேற்றது, கையில் ஆட்சிப்பொறுப்பு, அதுவும் மண்ணின் மைந்தர்களின் கையில் ஆட்சிப்பொறுப்பு, கிழக்கிலுள்ள மூவினங்களுக்கும் இடையேயான நல்லுறவுகளை வளர்த்தெடுப்பதற்கான அருமையான வாய்ப்பு என சாதகமான பல விடயங்கள் இருப்பினும் முதல்வர் சந்திரகாந்தனுக்கும் கருணாவுக்கும் உள்ள அதிகாரப் போட்டி, நிபந்தனையில்லாமல் ராஜபக்சவின் அரசுக்கு அடிபணியும் போக்கு, தொலைநோக்கிலான அரசியல் வேலைத்திட்டம் இல்லாமை போன்ற காரணிகளால் கிழக்குக்கு விடிவு தள்ளிப் போய்க்கொண்டேயிருக்கிறது.
உன்னிப்பாகக் கவனித்தால் இன்று இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் போரை விடுதலைப் புலிகளைத் தவிர மற்றைய அனைத்துப் பிரதான அரசியற் போக்குகளும் ஆதரிக்கின்றன, உற்சாகமூட்டுகின்றன என்பதே உண்மை. இவற்றுக்குள் தமிழ் கட்சிகளும் இயக்கங்களும் அடக்கம். சர்வதேச வல்லாதிக்க அரசுகளும் போரை ஊக்குவிக்கின்றன. புலிகளும் யுத்த நிறுத்தத்தைக் கோருவது கலிங்கத்தை வென்ற சாம்ராட் அசோகனின் நிலையிலிருந்தல்ல என்பதை நாம் கவனிக்க வேண்டும். அவர்கள் வன்னியைத் தோற்கும் நிலையிலிருந்தே யுத்தநிறுத்தத்தைக் கோருகிறார்களே தவிர போர்மீது அவர்களுக்கு வெறுப்பெல்லாம் கிடையாது. கடந்த காலங்களில் போர் நிறுத்தங்களைப் பலதடைவைகள் தன்னிச்சையாக உடைத்தவர்கள் அவர்கள். இந்தப் பின்னணியில் போரை நிறுத்துவதற்கும் போரினால் அழிந்துகொண்டிருக்கும் மக்களைக் காப்பாற்றுவதற்குமான ஒரு அரசியல் தீர்வுக்காக யார் முயற்சிப்பது? போரை நிறுத்தும் வல்லமை யாரிடம் உள்ளது? போரிடும் தரப்புகளையும் போரின் ஆதரவாளர்களையும் யார் அமைதிப் பேச்சுவார்த்தை மேசைக்கு இழுத்து வரக்கூடியவர்கள்? இந்தக் கணத்தில் இந்தக் கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை. ஏனெனில் அதற்கான வல்லமை படைத்தவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ யுத்தத்தில் பங்கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லாத் தேவதைகளாலும் எல்லாச் சாத்தான்களாலும் சபிக்கப்பட்டிருக்கிறார்கள் யுத்தத்திற்குள் சிக்குண்டிருக்கும் ஈழத் தமிழர்கள்.
ஈழத் தமிழர்களைத் தனது அடக்குமுறைச் சட்டங்களின் மூலமும் ஆயுதங்கள் மூலமும் இலங்கை இனவாத அரசு தோற்கடித்துள்ளது. அதேபோல கருத்துச் சுதந்திர மறுப்பு, மாற்று அரசியல் போக்குகள் மீதான சகிப்பின்மை, ஒரு விடுதலை அரசியல் போராட்டத்தை சுத்த இராணுவவாத அரசியலாகச் சீரழித்தது, ஏகபிரதிநிதித்துவம் என்ற மன்னர் காலத்து எதோச்சாதிகார அரசியல் போன்றவற்றால் தமிழ் மக்களது நியாயமான உரிமைப் போராட்டத்தைச் சின்னாபின்னப்படுத்தி இன்று தமிழ் மக்களைக் கேட்க நாதியில்லாத மனிதர்களாகத் தோல்வியின் விளிம்புவரை இழுத்து வந்திருக்கிறார்கள் போராட்டத்தை ஒட்டுமொத்தமாகக் குத்தகை எடுத்த விடுதலைப் புலிகள்.
ஈழத்து அரசியல் குறித்து நமது கடந்தகால மதிப்பீடுகளையும் கற்பிதங்களையும் பிரமைகளையும் நாம் தூக்கி எறிந்துவிட்டு இன்றைய புறநிலைகள், மாறிக்கொண்டேயிருக்கும் சர்வதேச அரசியல் - பொருளியல் சூழல்கள், நாட்டில் சிவனொளிபாதமலைக்கும் மேலாக வளர்ந்து நிற்கும் இனவாத அரசியல் போன்றவற்றைக் கவனத்தில் எடுத்தே நாம் இனிப் பேசவேண்டும். தேர்தல் அரசியல், பாராளுமன்ற ஜனநாயகம் போன்றவற்றையெல்லாம் நாம் முன்பைப் போல அசூசையுடன் நோக்கத் தேவையில்லை என்றுதான் கருதுகிறேன். இதன்பொருள் இந்த முதலாளிய அரசியல் நெறிகள்தான் நமக்கான இறுதித் தீர்வும் நமது அரசியல் வழியும் என்பதல்ல. குறிப்பான அரசியல் சூழல்களைப் பொறுத்துத்தான் நாம் எமது அரசியல் நெறிகளைத் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. இந்த விடயத்தில் நமக்கு பிரசந்தாவும் ஹியூகோ சாவேசும் முன்னுதாரணங்களாகக் கொள்ளத்தக்கவர்கள்.
புதிய அரசியல் சூழல்களை முன்னிருத்தி மூன்று முக்கிய புள்ளிகளில் நமது கவனத்தைச் செலுத்த வேண்டும் எனக் கருதுகிறேன். இவற்றில் முதலாவது கோரிக்கைக்கும் ஈழப் போராட்டத்துக்கும் ஒரே வயது. ஈழப் போராட்டத்துடனேயே சேர்ந்து பிறந்த கோரிக்கையிது:
1. மாற்று அரசியல் கருத்துகளைத் தடைசெய்தும் மாற்றுக் கருத்தாளர்களைக் கொன்று குவித்தும் விடுதலைப் புலிகள் துப்பாக்கியால் தொடக்கி வைத்த கருத்துச் சுதந்திர மறுப்புக் கலாசாரம் இன்று இலங்கைத் தீவு முழுவதற்குமான பொதுக் கலாசாரமாக மாறியுள்ளது. இந்தக் கருத்துச் சுதந்திர மறுப்புக்கு எதிரான போராட்டம்தான் அரசியல் சுதந்திரத்தைப் பெறுவதற்கான தொடக்கப் புள்ளி. கருத்துச் சுதந்திரம், மாற்று அரசியல் செயற்பாடுகள், கட்சி கட்டுவதற்கான உரிமை போன்ற அடிப்படை அரசியல் உரிமைகளை விடுதலைப் புலிகளிடம் மட்டும் கோரிப் போராடினால் போதாது. இந்தக் கோரிக்கைகளை இலங்கை அரசிடமும் கிழக்கில் அதிகாரத்தை வைத்திருக்கும் TMVP யிடமும் நாம் வலியுறுத்திப் போராட வேண்டியிருக்கிறது.
2. ஒரு நாட்டின் அரசியலில் இடதுசாரிகளின் வகிபாகம் நிரம்பவும் முக்கிமானது. குறிப்பாக இலங்கையைப் பொறுத்தளவில் பல்வேறு சமூக நலச் சட்டங்களையும், தனியுடமைகளைப் பொதுச் சொத்துகளாக்கியது போன்ற பாரிய அரசியல் மாற்றங்களையும் சாதித்தவர்கள் இடதுசாரிகளே. இன்று அப்பாவிப் பொதுமக்கள் யுத்தத்தின் பேரால் கொல்லப்படுவதற்கு எதிராகச் சரியோ தவறோ தமிழகத்தில் எழுந்திருக்கும் யுத்த மறுப்புக் குரல்கள் அளவுக்கேனும் சிங்கள மக்கள் மத்தியிலுள்ள இடதுசாரிகள் தங்கள் தமிழ்ச் சகோதரர்களுக்காக ஒரு யுத்த மறுப்புப் போராட்டத்தைச் செய்யத் தவறியிருக்கிறார்கள். இன்று தீவிர இனவாதக் கட்சியாக மாறியிருக்கும் ஜேவிபி, அரசின் பங்காளிகளாயிருக்கும் பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகள் போன்றவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தாலும் நாட்டிலுள்ள ஏனைய சிறு இடதுசாரிக் குழுக்களதும் இடது அறிவுத்துறையினரதும் கலைஞர்கள் எழுத்தாளர்களினதும் ஆழ்ந்த மவுனம் வேதனைக்குரியது. இலங்கை அரசியலில் புதிய சனநாயகத்தக்கான ஒரு பாதையைத் திறந்து வைக்கச் சிங்கள இடதுசாரிகள் அளவுக்கு வல்லமையும் வாய்ப்புகளும் உள்ளவர்கள் வேறு யாருமில்லை. மிகச் சிறிய கட்சியான ‘சோசலிச சமத்துவக் கட்சி’ தொடர்ச்சியாக இனவாத யுத்தத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வருவதுபோல சிங்கள மக்களை யுத்தத்திற்கு எதிராகவும் இனவாதத்திற்கு எதிராகவும் பரவலாக அணிதிரட்ட சிங்கள இடதுசாரிகள் முயற்சிக்க வேண்டும். கடந்த காலங்களைப் போலச் சோம்பியிராமல் சிங்கள இடதுசாரிகளுடன் நமது உரையாடல்களை நாம் வலுப்படுத்த வேண்டும்.
3. 1985ல் இருந்து நாம் எத்தனையோ அமைதிப் பேச்சுவார்த்தைகளைக் கண்டிருக்கிறோம். ஒவ்வொரு பேச்சுவார்த்தைக்கும் பின்பாக முன்பிருந்ததைக் காட்டிலும் நிலமைகள் மோசமடைந்ததே கண்ட மிச்சம். பேச்சுவார்த்தை மேசைகளைப் பகடைகள் உருட்டும் பலகைகளாக உபயோகித்தார்களே தவிர யுத்தம் நிறுத்தப்பட வேண்டும், தமிழ் மக்களுக்குரிய நியாயமான அரசியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென்பதிலெல்லாம் இரு தரப்புமே அக்கறை செலுத்தவில்லை. அரசுக்கு இனவாத அரசியலும் அதன் மூலம் அறுவடை செய்யவிருக்கும் வாக்குகளும்; புலிகளுக்கு தமது இயக்கத்திற்கான உச்சபட்ச அதிகாரமுமே முக்கியமாயிருந்தன. யுத்தத்தால் துன்புறும் மக்களைப் பற்றி ஒரு மயிரும் கவலைப்படவில்லை. ஏதாவது அதிசயம் நிகழ்ந்து மறுபடியும் பேச்சுவார்த்தை மேசைக்குச் சென்றால்கூட இந்த யுத்தமோகிகள் அமைதியை நோக்கி ஒரு காலடியாவது எடுத்து வைப்பார்களா என்பது சந்தேகமே. இந்த நிலையில்தான் நாம் தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வை முன்வைக்குமாறு அரசிடம் உரத்துக் கேட்க வேண்டியிருக்கிறது. இந்த நாட்டின் சட்டபூர்வமான அரசென்றும் அரசியல் சாசனத்திற்கமைய ஆட்சி நடத்தும் அரசென்றும் சொல்லிக்கொள்ளும் மகிந்த ராஜபக்சவின் அரசுக்கு அந்தக் கடமையிருக்கிறது. தமிழர்களின் மற்றும் இதர சிறுபான்மையினர்களின் தலித்துகளின் அரசியல் உரிமைகளை உறுதி செய்யும் வண்ணம் இலங்கையின் அரசியல் சாசனம் மாற்றியமைக்கப்பட வேண்டும். இந்தத் தீர்வை இலங்கை அரசு முன்வைத்தால் புலிகள் ஏற்கிறார்களோ இல்லையோ மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதற்குப் பின்னால் புலிகளை அரசியல்ரீதியாக ஒழித்துக்கட்டும் வேலையை அரசு செய்ய வேண்டியிருக்காது. மக்களே அந்த வேலையைப் பார்த்துக்கொள்வார்கள். வரலாறு நெடுகவும் எத்தனையோ மல்லா மலைகளை ஒழித்துக்கட்டியவர்கள் அவர்கள்.
அரசு இத்தகைய நியாயமானதொரு தீர்வை வழங்காமல் இந்த நாட்டில் அமைதி திரும்பப் போவதில்லை. புலிகளை இராணுவரீதியாக ஒழித்துக்கட்டுவது சாத்தியமற்றதாயிருக்கலாம். ஆனால் புலிகளை அரசியல்ரீதியாக ஒழித்துக்கட்ட முடியும். இதை அரசு செய்யத் தவறினால் “இலங்கை அரசுத் தலைமையை என்னால் அரசியல்ரீதியாக ஒழித்துக்கட்ட முடியாமலிருக்கலாம் ஆனால் இராணுவரீதியாக ஒழித்துக்கட்ட முடியும்” என்று காலாதிகாலத்துக்கும் யாழ்ப்பாணத்தின் கடற்கரையிலோ மட்டக்களப்பு வாவியோரத்திலோ வன்னியின் வயல்களிலோ புதிது புதிதாகக் குரல்கள் முளைத்துக்கொண்டுதானிருக்கும். நம்மிடையே பிரபாகரன்களுக்கும் முகுந்தன்களுக்கும் சபாரத்தினங்களுக்கும் பஞ்சமா என்ன!



















நல்லதோர் கட்டுரை/கருத்து.இதுவே உண்மை .என்ன செய்வது உண்மைகள் சில நேரம் உறைக்கத்தான் செய்யும். ஏற்கனவே புலி எதிர்ப்பாளர்கள் என்று உங்களை கூறுகின்றார்கள்,அதனால்,”புலிகளை அரசியல்ரீதியாக ஒழித்துக்கட்டும் வேலையை “போன்ற சொற்களை தவிர்ப்பது நல்லது.புலிகளை அரசியல் ரீதியாக அணுகும் வேலையை என்று எழுதியிருந்தால் இதை வாசிக்கும் மக்கள் சிந்திக்க வாய்ப்புண்டு.
எனினும் இத்தனை சீரழிவுகளிற்குப் பின்னும் ஒருதொகை மக்களிடையே புலிகளுக்கான ஆதரவு இருக்கத்தான் செய்கிறது என்று கூறுகின்றீர்கள் அப்படியிருக்க உங்களின் கருத்தை அந்த ஒரு தொகை ஆதரவாளர்கள் எப்படி ஏற்றுக்கொள்ளுவார்கள் என்று எதிர்பார்ப்பீர்கள்?
சிங்கள அரசு நியாயமானதொரு தீர்வை வழங்கும் என்று நீங்கள் இன்னும் நம்புகின்றீர்களா?
பெரியவர் நெடுமாறன், வைகோ போன்றவர்களின் மழுங்கிப்போன, அரசியல், சமூகம் குறித்துக் கூரிய பார்வைகளற்ற வெறும் உணர்ச்சிப் பெருக்கெடுக்கும் உரைகள் நமக்கு இருபது வருடங்களாகவே பழகிப்போனவைதான். அந்த உரைகளும், அவர்களின் தமிழ்த் தேசிய ஆதரவு அரசியலும் ஈழப் பிரச்சினையைப் பொறுத்தளவில் தமிழகத்திலோ ஈழத்திலோ குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றங்களைச் சாதித்தவையல்ல
என்கின்றீர்கள். பெரும்பான்மை மக்கள் இவர்களின் உணர்ச்சிப் பெருக்கெடுக்கும் உரைகளில் மயங்கிவிடுவது உண்மை என்பதை மறுப்பீர்களா? லண்டனில் நடந்த மாவீரர் நிகழ்விற்க்கு வைகோ வந்திருந்தார் கிட்டத்தட்ட அம்பதினாயிரம் மக்கள் கலந்துகொண்டார்கள்.அவரின் உரைக்கு எழுப்பப்பட்ட கரகோசம் வானைப்பிளந்தது.அதிலிருந்து தெரிவது மக்கள் எல்லோரும் மடையர்கள் என்பதுதான்.எத்தனை மடையர்களுக்கு புத்தி சொல்லப்போகின்றீர்கள்?அது சாத்தியமுமில்லை.பேசாமல் புலியுடன் சேர்ந்து ஒரு தீர்வுத்திட்டத்திற்க்கு வாருங்கள் அதுதான் எல்லோருக்கும் நல்லது.
sam said this on November 27th, 2008 at 10:33 pm
//கெப்பற்றிக்கொலாவில் பொதுமக்கள் பேருந்துக்குள் குண்டு வைத்து 64 பொதுமக்களைப் புலிகள் கொன்றதையும் …கொழும்பு கோட்டைப் பேருந்து நிலையத்திற்குள் வெடித்துப் பத்துப்பேரைக் கொலைசெய்ததைம் … தெஹிவள புகையிர நிலையத்தில் புலிகள் வைத்த குண்டால் ஒன்பதுபேர்கள் கொல்லப்பட்டதையும்…//
When the occupation is ugly you cannot expect the resistance to be beautiful. I humbly request the author to cite at least one ideal revolutionary movement in the earth which haven’t had any excesses so far. It is very well for all of us to think of the origins and evolutions of the suicide bombers throughout the world. Nothing happens in the vacuum. Things have to come from somewhere. Tigers are not hot air balloons as one may imagine but were the mere answer to the oppression. The meaning of the terror and the politics of imperialism had been countered and deconstructed for umpty times. We always need some body to get victimized and will never practice the act of self criticism. I sincerely suggest Comrade Shobha Sakthi to look at the relevance of Gramscian hegemony with the current dynamics of the war of Sri Lanka rather than emotionally putting things.
Suganthan said this on November 28th, 2008 at 11:39 am
இந்த உண்மைகளெல்லாம் புலிகளுக்கு ஆதரவு அந்த ஒரு தொகை மக்கள் அறியாமலில்லை.. அது லண்டனில் கரகோஷம் செய்த மடையர்களாயிரந்தாலும் சரி, வேறு எந்த மடையர்களாக இருந்தாலும் சரி நான் உட்பட..
கவனத்திற்கொள்ளப்படக்கூடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள மூன்றிலும் இரண்டாவது தவிர மற்றையவை சாத்தியமானதென கருதுகிறீர்களா?
யுத்தவெறி பிடித்திருக்கும் இன்றைய சிங்கள சமுதாயத்தில் இடதுசாரிகள் எதுவும் செய்துவிட முடியாது.
ஆக, இந்த மடையர்களாகிய நாங்கள் புலிகளை மட்டுமே நம்பியிருக்கிறோம்.. அது நீங்கள் சொன்ன மாதிரி விடுதலைப் புலிப் போராளிகளின் போர்க் குணாம்சமும் அர்ப்பணிப்பு உணர்வும் குறைத்து மதிப்பிடப்படக் கூடியவை அல்ல என்பதாலும் இத்தனை வருடங்களாயும் விலைபோகாமல் இருக்கும் பிரபாகரன் மேல் கொண்ட நம்பிக்கையாலுமே..
Vibina said this on November 28th, 2008 at 2:49 pm
//கொழும்பில் நடந்து முடிந்த ‘சார்க்’ மாநாட்டின் போது மாநாட்டை ஒட்டிப் பத்து நாட்கள் யுத்த நிறுத்தம் செய்வதாகப் புலிகள் அறிவித்த போதிலும் அரசு யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. ஈழப் போராட்டத்தின் வரலாற்றிலேயே முதற் தடவையாக ஒரு யுத்த நிறுத்தத்திற்குச் சம்மதிக்க அரசு மறுத்த சம்பவமது. யுத்தத்தில் வெற்றிகளை அரசு ருசிக்கத் தொடங்கியிருந்த காலமது.//
நீங்கள் மற்றவர்கள் வரலாறு தெரியாமல் கதைக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். தற்போது புலிகள் அறிவித்த யுத்தநிறுத்தம் தான் ஈழப்போராட்டத்திலேயே முதன் முதலாக சிறிலங்கா அரசால் ஏற்றுக்கொள்ளப்படாத யுத்தநிறுத்தம் என சொல்கிறீர்கள். இதன்முலம் போராளிகள் ஒரு போதும் யுத்தநிறுத்தத்துக்கு தயார் இல்லை என சொல்கிறீர்கள்.
சந்திரிகா ஆட்சியில் இருந்தபோது புலிகள் யாழ்ப்பாணத்தை நோக்கி முன்னேறி சாவகச்சேரியில் நின்று கொண்டு யுத்தநிறுத்தம் அறிவித்தது தெரியாதா? அந்த யுத்தநிறுத்தம் அரசால் ஏற்கப்படாமல் இருந்தபோதும் 3-4 மாதங்கள் புலிகளால் ஒரு தலைப்பட்சமாக கடைப்பிடிக்கப்பட்டது தெரியாதா? அதன்போது அரசு அக்கினி கீல என முன்னேறித்தாக்க முற்பட்டு மூக்குடைப்பட்டது தெரியாதா?
பிரேமதாசா காலத்தின்போதும் இது நடைபெற்றது. இந்திய இராணுவ காலப்பகுதியிலும் யுத்தநிறுத்தம் புலிகளால் அறிவிக்கப்பட்டு அது ஏற்றுக்ககொள்ளப்படவில்லை. உங்களுக்கு சந்திரிகா காலத்தில் நடந்ததே தெரியாதபோது இந்திய இராணுவகாலம் எப்படி தெரிந்திருக்கும்.
thampi said this on November 28th, 2008 at 3:05 pm
Shoba, your article is unchallengeable, but not practicable.
Kavi said this on November 28th, 2008 at 9:40 pm
//..அது சாத்தியமுமில்லை.பேசாமல் புலியுடன் சேர்ந்து ஒரு தீர்வுத்திட்டத்திற்க்கு வாருங்கள் அதுதான் எல்லோருக்கும் நல்லது….//
அதுதானே சோபா முன்னொருமுறை மாற்றுக்கருத்தாளர்களிடம் உருப்படியான எந்த வொரு வேலைத்திட்டமும் கிடையாது என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டாரே!
ரகுரகு said this on November 28th, 2008 at 9:49 pm
//நாட்டில் சிவனொளிபாதமலைக்கும் மேலாக வளர்ந்து நிற்கும் இனவாத அரசியல் போன்றவற்றைக் கவனத்தில் எடுத்தே நாம் இனிப் பேசவேண்டும். //
அப்ப வெள்ளாளரின் கற்பிதமே சிங்களப் பேரினவாதம் எண்டு இராகவன் வாசிச்ச கட்டுரை இப்ப மலையேறிட்டுதா?
உங்களைப் போன்றவர்களுக்கு என்றுமே அரசியற் தெளிவு இருந்ததில்லை, இனியும் இருக்கப் போவதில்லை.கற்பனைகளால் கதை எழுதலாம், தீர்க்கதரிசனமான அரசியல் முடிவுகளுக்கு மக்களின் பிரச்சினைகள் பற்றிய தெளிவான அரசியற் பார்வை வேண்டும்.இன்று மாற்றுக் கருத்து என்பது தனி நபர்களின் குடும்பி பிடி சண்டையாக் ஏன் இருக்கிறது என்பது பற்றி சுய விமரிசனம் செய்தால் இன்னும் தெளிவடைவீர்கள்.
மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதினிதித்துவப் படுத்தாத எந்த இயக்கமோ கொள்கையோ சித்தாந்தமோ இவ்வாறு தான் சிதைவடையும்.
அற்புதன் said this on November 29th, 2008 at 11:31 am
எனவேதான் இந்தச் சூழலில் ‘இந்திய அரசே ஈழத் தமிழர்கள் மீது இரங்கு’ என்ற கோரிக்கை அல்லது ‘இலங்கைக்கு ஆயுதங்களை வழங்காதே’ என்ற ஒருநாள் கண்டனங்களால் நம்மால் எதுவும் சாதித்துவிட முடியாது. ஒடுக்கப்படும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான தமிழகத்துக் குரல்களை அரசியல்ரீதியாக அணிதிரட்ட வேண்டும். அந்த அரசியல் போக்கு வெறுமனே இலங்கை அரசின் ஒடுக்குமுறைகளை மட்டும் கவனத்தில் எடுத்துக்கொண்டு புலிகளினதோ அல்லது மற்றைய இயக்கங்களினதோ மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டும் காணாமலும் விட்டுச் செல்லக்கூடாது.
Tamils have to be saved from the war first.Their right to live
is more important now than finding solutions to other issues.
How can tamils in tamil nadu be expected to find solutions to
issues like caste discrimination in sri lanka when caste is
a major issue in tamil nadu.Shoba is either naive or is clever
by half.
someone said this on November 30th, 2008 at 8:50 am
நம்மிடையே பிரபாகரன்களுக்கும் முகுந்தன்களுக்கும் சபாரத்தினங்களுக்கும் பஞ்சமா என்ன!
Nor do we lack Shoba Shakthis
someone said this on November 30th, 2008 at 8:51 am
‘இந்து’ ராம் ‘துக்ளக்’ சோ போன்றவவர்கள் ஊடகக் கிரிமினல்கள் ஆனால் நெடுமாறன் வைகோ போன்றவர்கள் பெரியவர்கள். உங்களுடைய பார்வை நன்றாக இருக்கிறது.
முதலில் தமிழ்மக்களுடைய தற்போதைய பிரச்சினை என்ன என்றொரு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும்.
பூப்படையாத பெண்ணுக்கு பிள்ளைவரம் கேட்கிறீர்கள்.
Rengan said this on November 30th, 2008 at 9:00 am
ஈழப் போராட்டத்தின் வரலாற்றிலேயே முதற் தடவையாக ஒரு யுத்த நிறுத்தத்திற்குச் சம்மதிக்க அரசு மறுத்த சம்பவமது//
செல்லாது செல்லாது !
யாரோ ஒருவர் சொன்னது போல 2000 இல் புலிகள் ஒருமாதம் 2 மாதம் 3 மாதம் என நீடித்து வந்த யுத்த நிறுத்தத்தை சந்திரிகா ஏற்றுக்கொள்ளாமல் தீச்சுவாலை (அக்கினிகீல) நடவடிக்கையை ஆரம்பித்தார்.
அதிலும் யுத்த வெற்றியில் கூட அவ ருசித்திருக்கவில்லை. வெற்றி நிச்சய தோல்வி ஆனையிறவு வீழ்ச்சியென நிலைமை கவலைக் கிடமாக இருந்த போதும் யுத்த நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
கொழுவி said this on November 30th, 2008 at 9:01 am
ஷோபா சக்தியின் கட்டுரை மிக முக்கியமானதாகப் படுகிறது. புனைவெழுத்தில் பெரும்பாலும் ஈடுபடும் அவரிடமிருந்து வெளிப்படும் அரசியல் பார்வையின் தெளிவும், நுட்பமும் வியப்பளிக்கிறது. உதாரணத்திற்கு ஒரு முக்கிய புள்ளியை விவாதிக்க விரும்புகிறேன்.
“போர் என்பது அரசியலை வேறு வகையில் செயல்படுத்துவது” என்று ஜெர்மானிய யுத்த தந்திரி கிளாஸ்விட்ஸ் கூறியது சமகால அரசியல் சிந்தனையில் விரிவாக விவாதிக்கப்படும் கூற்று. “War is not a mere act of policy but a true political instrument, a continuation of political activity by other means.” எனவே போரும் அரசியலும் ஒன்றுக்கொன்று மாற்றாகும் ஒரேவகையான செயல்பாடு. இதன்படி ஷோபா சக்தி இலங்கை அரசை நோக்கி விடுக்கும் சவால், எல்.டி.டி.ஈ-யை அரசியல் ரீதியாக முறியடிக்கச் சொல்வது, மிக நுட்பமான அரசியல் கூற்றாகும். வெறும் யுத்த ரீதியான வெற்றி அரசியல் வெற்றியல்ல என்றும் எச்சரிக்கிறார். ஆழ்ந்து பரிசீலிக்கப்பட வேண்டிய கூற்று. இக்கட்டுரையின் வித்தியாசமான தொனி காரணமாக அதன் முக்கியத்துவம் புரிந்துகொள்ளப்படாமல் போய்விடக்கூடாது என்பதற்காக இந்த பின்னூட்டத்தை இடுகிறேன்.
ராஜன் குறை said this on November 30th, 2008 at 11:17 am
“மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதினிதித்துவப் படுத்தாத எந்த இயக்கமோ கொள்கையோ சித்தாந்தமோ இவ்வாறு தான் சிதைவடையும்.”
“இன்று மாற்றுக் கருத்து என்பது தனி நபர்களின் குடும்பி பிடி சண்டையாக் ஏன் இருக்கிறது என்பது பற்றி சுய விமரிசனம் செய்தால் தெளிவடைவீர்கள்.”
அற்புதன் போன்றவர்வர்கள் வெறுமனே பின்னூட்டம் விடாமல் சோபாசக்தி போலாவது கட்டுரைகளை எழுதுவது நல்லது.
thirunavukarasu said this on December 1st, 2008 at 8:10 am
“போர் என்பது அரசியலை வேறு வகையில் செயல்படுத்துவது”
சில இடதுசாரிகள் கடந்த 20 வருடமாகக் இதுசாரப்படக் கூறி வருகின்றார்கள். இடதுசாரிகள் என்றைக்கும் ஆயுதப்போராட்டத்தை குறை கூறியவர்கள் அல்ல. அவர்கள் அரசியல் ரீதியான செயற்பாட்டுக்கு- மக்கள் அரசியலுக்கு- போருக்கு கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவத்தை கொடுக்கச் சொல்லிக் கேட்டார்கள். அதன் மூலம் தமிழ் மக்கள் தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது அவர்களது கருத்து.
ஆனால் நம்ம ராஜன்குறை சோபாசக்தியைக் காட்டிக் கொடுத்துப்போட்டார். இடதுசாரிகளிடம் இருந்து சோபாசக்தி வித்தியாசப்படும் இடத்தை தெளிவாக எல்லோருக்கும் இனம்காட்டியிருக்கிறார்.
அதாவது,
இடதுசாரிகள் மக்கள் அரசியலை முன்னெடுக்கச் சொல்லிக் கேட்டது போருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்த புலிகளை. இடதுசாரிகள் தமிழ்மக்களின் உரிமைகள் தொடர்பாகக் கரிசனையுடன் இருந்தார்கள். பேரினவாதத்தின் கொடுங்கரங்களை நன்கு அறிந்திருந்தார்கள். அதனாலாயே அவர்களால் போராட்டத்தை நல்வழிப்படுத்துமாறு கேட்க முடிந்தது.
ஆனால்,
நம்ம சோபாசக்தி இலங்கை அரசாங்கத்திடம்- அதன் வேலைத்திட்டத்திற்குச் சமாந்தரமாக- வேண்டுகோள் விடுக்கிறார் புலிகளை அரசியல் ரீதியாக முறியடிக்குமாறு. இங்கே, சோசக்தியின் அரசியல் அம்பலப்பட்டு நிக்கிறது. அதாவது சோபாசக்தி இலங்கை அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குகிறார். இங்கே, சோபாசக்தியின் அரசியல் பிதுங்கி வெளித்தெரிகிறது. அரசாங்கம் அரசியல் ரீதியாக வெற்றிபெற முடியாமல் போனால் தமது அதிகாரக்கரங்களை இலங்கைவரை நீட்ட முடியாது போய்விடும் என்பது அவருக்கு விளங்குகின்றது. இலங்கை அரசாங்கத்தின் போரையும் இலங்கை அரசாங்கத்தின் அரசியல் நகர்வையும் பற்றியதே இவர்களது கவனம். கவனிக்க - ‘இலங்கை அரசாங்கம்’
இவ்வளவு காலமும் ‘பிடிபடாமல்’ இருந்த ராஜன்குறை இந்த பின்னூட்டத்துடன் பிடிபட்டுப் போனார். சோபாசக்தி இலங்கை அரசை நோக்கி சவால் விடுறாராம் அதை நாம் ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டுமாம் எண்டு காதில பூ சுத்துறார். சோபாசக்தியின் கோவணத்தை மட்டுமல்லாது தனது கோவணத்தையும் சேர்த்து அவுத்துப் போட்டார் ராஜன்குறை.
ராஜன்குறை,
நீங்கள் சொல்லிற விசயம் எல்லாம் ஈழத்தவன் எப்போதோ கேட்டு புளிச்சுப் போச்சு. நீங்களும் மெத்தப்படிச்சனியள் எண்டு நாங்களும் கேட்டுக் கொண்டிருந்தம். நீங்கள் ‘காகமோனா’ பற்றி எழுதிய போதெல்லாம் நாமும் வாய்பிளந்து பார்த்திருந்தோம். ‘காகமோனா’ என்று எழுதாமல் ‘காகமோனாஃபா’ என்று எழுதினால் நல்லது என நினைக்கிறேன். ஏனெனில் உங்களுக்கு முக்கியமான பிரச்சனை அதுவென்பதே எனது தாழ்மையான கருத்து.
கா - CA -CAPITALISM- முதலீட்டியம்
க - CO -COLONIALISM -காலனீயம்
மோ- MO -MODERNITY -நவீனம்
னா - NA - NATIONALISM - தேசியம்
ஃபா - FA - FACTIONALISM - குழுவாதம்
CA-CO-MO-NA-FA = காகமோனாஃபா.
‘என் கடன் இருமொழிகளிலும் எழுத்துப்பணி செய்து கிடப்பதே.’ என்று அறைகூவல் விடுக்கும் ராஜன்குறை எழுதுவதையும் வாசிப்பதையும் செய்துகொண்டு யோசிப்பதில்லையோ என்ற சந்தேகம் இயல்பாகவே நம்மிடம் வந்துவிடுகிறது.
marathan said this on December 1st, 2008 at 8:19 am
ஷோபாசத்தியின் பல கட்டுரைகளை போல மிக முக்கியமான தனித்துவமான கட்டுரை என்பதில் சந்தேகமில்லை. ஆங்காங்கே எனக்கு சில பிரச்சனைகள் இருந்தாலும், இறுதியில் வரும் 3வது பாயிண்டு மட்டும் இந்த பின்னூட்டத்தை எழுத வைக்கிறது -ராஜன் குறையும் பாராட்டி, அதை கவனிக்காமல் போகும் அபாயத்தையும் சுட்டிக்காட்டுவதால்.
ஷோபா://இந்த நிலையில்தான் நாம் தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வை முன்வைக்குமாறு அரசிடம் உரத்துக் கேட்க வேண்டியிருக்கிறது. //
ராஜன்://இதன்படி ஷோபா சக்தி இலங்கை அரசை நோக்கி விடுக்கும் சவால், எல்.டி.டி.ஈ-யை அரசியல் ரீதியாக முறியடிக்கச் சொல்வது, மிக நுட்பமான அரசியல் கூற்றாகும். வெறும் யுத்த ரீதியான வெற்றி அரசியல் வெற்றியல்ல என்றும் எச்சரிக்கிறார். //
ரொம்ப ஆழமாய் யோசிக்காததால் எனக்கு எழும் சாதரணமான கேள்வி.
பதிவு முழுக்க இலங்கை இனவாத அரசு/புலிகள் இரண்டையுமே பயங்கரவாத பாசிச நிறுவனம் என்பதாக பார்க்கும் சோபாசக்தி, இறுதியில் இலங்கை அரசை மட்டும் எந்த விதத்தில் இப்படி கோரிக்கை வைக்கவும், எச்சரிக்கை விடவுமான லெஜிடிமேட் சக்தியாக கருதுகிறார் என்று புரியவில்லை. ஏன் புலிகளை பார்த்து ̀பிற்போக்கு அரசியலை விடுத்து, பாசிசத்தை விடுத்து வாருங்கள், மீண்டும் முனைந்து அரசியல்ரீதியாய் இலங்கை இனவாத அரசை தோற்கடியுங்கள் என்று வேண்டுகோள் வைக்கவில்லை? இன்றுவரை எந்த வித நியாயத்தையும் தமிழ் மக்களுக்கு தராத நிறுவனம், அதன் அல்ட்ரா தீவிர தலைமையில் இன்று அதை வழங்க வாய்ப்பு இருப்பதாகவும், புலிகளிடம் மாற்றத்திற்கு அப்படி ஒரு வாய்ப்பே இல்லை என்று ஏன் சோபா கருதுகிறார் என்று எளிமையாக யோசித்து புரியவில்லை. ஆழமாக யோசிக்க வேண்டுமோ?
ரோஸாவசந்த் said this on December 1st, 2008 at 7:28 pm
பிராமணீயஎதிர்ப்பு சாதியெடுக்குமுறை அழித்தொழிக்க தலித்திய அரசியலை தேடுதல் போன்றவற்றை விட்டொழித்தால் மட்டுமே!
சோபாசக்தியால் ஒரு உருப்படியான அரசியல்கட்டுரையை எழுத
முடியும்.மற்றும் படி கதை எழுதுவதோடு நின்றுகொள்வது நல்லது
ஏன்னென்றால் அதுகதைதானே! எப்படியும் எழுதலாம்.
chandran.raja said this on December 2nd, 2008 at 8:10 am
ஈழத்தமிழர்களின் அவலங்கள், அவர்களுக்கான தொலைநோக்கு இடதுசாரிச் சித்தாந்தத்தினூடான உங்கள் அரசியல் தீர்வு (?), எல்லாக் குரல்களையும் ஒலிக்கவிடுமாறு இலங்கைக்குச் சவால் விடும் தீரம் எல்லாவற்றையும் மீறி உங்களது இடுகையில் அப்பட்டமாகத் துருத்திக் கொண்டிருப்பது புலியெதிர்ப்பு மட்டுமே. அதையும்கூடப் புரிந்துகொள்ள முடிகிறது, உங்களது இந்த வரிகளால் // புலிகளால் வஞ்சிக்கப்பட்ட, அழித்தொழிக்கப்பட்ட இந்த இயக்கங்களின் கோபத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.//.
இப்படிப்பட்ட ஒரு கோபம்தான் உங்கள் எழுத்தை இயக்குவதே தவிர, வேறு இடதுசாரிப் புரட்சியுமில்லை, புண்ணாக்குமில்லை!
புலிகள் இருக்கும்போது கிடைக்காத விடுதலையும், நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் எழுத்துரிமையும் பேச்சுரிமையும், புலிகளை ‘ஒழித்ததும்’ இலங்கை அரசாங்கம் தங்கத் தாம்பாளத்தில் வைத்து சோபாசக்திக்குக் கொடுக்கும், அதை உலகம் பார்த்துக்கொண்டே இருக்கும்!
Sundaravadivel said this on December 2nd, 2008 at 8:11 am
//“மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதினிதித்துவப் படுத்தாத எந்த இயக்கமோ கொள்கையோ சித்தாந்தமோ இவ்வாறு தான் சிதைவடையும்.”
“இன்று மாற்றுக் கருத்து என்பது தனி நபர்களின் குடும்பி பிடி சண்டையாக் ஏன் இருக்கிறது என்பது பற்றி சுய விமரிசனம் செய்தால் தெளிவடைவீர்கள்.”
அற்புதன் போன்றவர்வர்கள் வெறுமனே பின்னூட்டம் விடாமல் சோபாசக்தி போலாவது கட்டுரைகளை எழுதுவது நல்லது.//
இவ்வாறு விலாசம் காட்டும் கட்டுரைகளை,மக்களின் போரட்டத்தைக் கைவிட்டு சுய நலன்களைப் பாதுகாக்கப் புலம் பெயர்ந்தவர்கள் எழுதுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.புலி கொல்லும் என்று புலம் பெயர்ந்தோம் என்று சொல்பவர்களுக்கு, புலியைக் கொல்ல எல்லோரும் தானே முயன்றீர்கள் அதற்காகப் புலி மக்களை விட்டு விட்டு புலம் பெயர்ந்ததா?
புலம் பெயர் தேசத்தில் இருந்து எந்த மாற்றும் வெளிப்படாததற்கான அடிப்படைக் காரணம் புலம் பெயர்ந்தவர்கள் போரடும் மக்களிடம் இருந்து அன்னியப்பட்டவர்கள்.புலம் பெயர்ந்தவர்கள் காவித் திரிவது தாம் புலம் பெயர்ந்த போது தமக்கு ஏற்பட்ட நினைவுகளையே.கணணித் திரையில் செய்திகளாகப் படித்து விட்டோ புத்தகங்ளைப் படித்துவிட்டோ கட்டுரைகள் எழுதுவதால் எதனையுமே சாதிக்க முடியாது என்பதே முப்பதாண்டுகள் புலம் பெயர் மாற்று அரசியலின் படிப்பினையாக இருந்துள்ளது.இது ஏன் என்ற கேள்வி பற்றி ஆராய்ந்தால் இதற்கான பதில் கிடைக்கும்.
மக்களுடன் இருந்து போராடுவதாலாயே புலிகளால் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
நீங்கள் ஒவ்வொரு வரும் ஆயிரம் கட்டுரை எழுதலாம், ஆனால் புலம் பெயர் தேசத்தில் கூட ஒரு ஐம்பது பேர் கூட உங்கள் கூட்டங்களுக்கு வரமாட்டார்கள்.இது கடந்த முப்பது வருடங்களாக நடப்பதொன்று.புலிப் பயத்தால் வரவில்லை என்று சொல்வது மேற்குலகின் சட்ட ஒழுங்கு நடைமுறைகளையும் புலிகளின் ஆளுகை பற்றிய போலிப் பரப்புரையாகவுமே இருக்கும்.
அதனாலையே அற்புதன் பெரிதாக வெட்டிப் புடுங்கும் கட்டுரைகளை எழுதுவதில்லை.பின் ஊட்டம் இட்டது, சோபாவும் இப்படி நாம் புதிதாகச் சிந்திக்க வேண்டும் புடுங்க வேண்டும் என்று கட்டுரை எழுதி பின்னால் வாற ஐம்பது பேரையும் பேக் காட்டாமால் ,பொழுது போகாட்டி புனை கதை எழுதட்டும் என்னும் நோக்கிலேயே.
போராட்டாத்தை போராடுபவர்களிடம் விட்டு விடுங்கள்.உங்களிடம் போராடுவதற்கான ஒரு மாற்று வழி இருக்கிறது என்றால், அந்த வழியை களத்தில் மக்களிடம் காட்டுங்கள்.புலத்தில் இருந்து ஆள் ஆளுக்கு இலவசக் கணணிகளில் கட்டுரை எழுதி சோக் காட்டதீர்கள்.
அற்புதன் said this on December 2nd, 2008 at 8:15 am
வசந்த், என்னுடைய பார்வையில் புலிகளிடம் யுத்தம் தவிர்த்து, அரசியல் ரீதியாக இலங்கை அரசை வெல்லச்சொல்ல காலம் கடந்து விட்டது என்றே தோன்றுகிறது. புலிகள் விரும்பினாலும் அது எதிர் தரப்பின் ஒத்துழைப்பின்றி, அல்லது மூன்றாவது சக்திகளின் தலையீடின்றி சாத்தியமா என்று தெரியவில்லை. ராணுவப்பாதையில் வெகுதூரம் சென்றுவிட்ட ஒரு இயக்கம் பாதையை மாற்றுவது கடினமானது. போரில் வெற்றி பெற்ற பிறகே அரசியல் சாத்தியம். போரில் இரு தரப்புமே வெல்லமுடியாத நிலையில், சர்வதேச அங்கீகாரமுள்ள பெரும்பான்மை இன அடிப்படையிலான தேசிய அரசிற்குத்தான் அரசியல் ரீதியான தீர்வை நோக்கி நகரும் பொறுப்பு அரசியல் ரீதியாகவும், அறவியல் ரீதியாகவும் அதிகம் இருக்கிறது. இலங்கை அரசை சிங்கள இனவாத அரசாக வர்ணித்து புறக்கணிப்பது நிகழும் போரின் கோரத்திலிருந்து அப்பாவி மக்களை காப்பாற்ற உதவாது என்ற நிலையிலேயே ஷோபாசக்தியின் கட்டுரை முக்கியமாகப் படுகிறது. இலங்கை அரசை நோக்கிப்பேசுவது அதை ஆதரிப்பது ஆகாது என்பது எளிய அரசியல் உண்மை. Legitimisation என்பதை நாம் தர வேண்டியதில்லை; நாம் தவிர்க்கக் கூடியதுமில்லை. உலக வரலாற்றுப் போக்கு நிகழ்த்துவது அது.
ராஜன் குறை said this on December 2nd, 2008 at 8:30 am
வசந்த்,
ஷோபா அப்படிப் பேசுவதற்கு இரு காரணங்கள் இருக்கலாம்:
1. தற்போதைய புலிகளின் மிகுந்த பின்னடைந்த நிலை. புலிகளுக்கு இனி முன்பிருந்த வாய்ப்புகள் அவர்களது சக்தி குறைந்த நாட்களில் கிடைப்பதற்கு சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.
2. என்ன இருந்தாலும் அரசியலமைப்பு ரீதியாக இலங்கை அரசு ஒரு கட்சி முறையிலான ஜனநாயக அரசு. அந்த அரசியலமைப்பில் மட்டும் தான் எதிர்கால மாற்றங்களுக்கு சாத்தியக்கூறுகள் உள்ளது.
Srikanth said this on December 2nd, 2008 at 5:20 pm
ராஜன், ஒரு வகையில் ஒத்து போகிறேன். ( ̀இலங்கை அரசை சிங்கள இனவாத அரசாக வர்ணித்து’ என்பதில் அல்ல). இன்னும் நுணுக்கமாக விவாதிப்பதை தவிர்க்க விரும்புவதால், உங்கள் பதிலுக்கு நன்றி கூறி நிறுத்திக்கொள்கிறேன். நன்றி!
ரோஸாவசந்த் said this on December 2nd, 2008 at 5:25 pm
Srikanth,
1. சோபா 6 வருசத்துக்கு முதல் என்ன பேசினவர் என்று சொல்ல முடியுமா?
2. இயலுமெனில் பிள்ளையானுக்கு போன் போட்டு கேட்டுப்பாருங்கோ ஜனநாயக அரசைப் பற்றிக் கேட்டுப் பாருங்கோ..
( ராஜன்குறையின் கண்டுபிடிப்புகளைப் பற்றிப் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. ரோசாவசந்தின் பதில் அதற்கு சரியான சாட்சி. )
marathan said this on December 2nd, 2008 at 5:59 pm
சுந்தரவடிவேல் அன்ட் அற்புதன்
எந்த விமர்சனமுமமில்லாமல் புலிக்கு ஞாயந்தெண்டி இனத்தை அழிக்கும் உங்கள்கருத்துகளைவிட இவ்வாறான கட்டுரைகள் புண்ணியஞ்சேர்க்கும். புலியை விடவும் மற்றதெல்லாம் மோசம் எண்டது எங்களுக்கநதெரியும். ஆனா அதுக்கும் புலிதான் காரணம் எண்டா திரும்பவும் உங்களுக்கு அல்சர் வரும்.
thillai said this on December 3rd, 2008 at 11:11 am
வைகோவையோ,நெடுமாறனையோ நொந்து புண்ணியமொன்றுமில்லை. அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தொழிலை திறம்படவே செய்துகொண்டிருக்கின்றார்கள்.
இக்கட்டுரை உண்மைகளை எடுத்தியம்பினாலும் அது குட்டையைக் கிளப்புவதாகவேமுடியும். அத்துடன் மக்களை இரண்டுங்கெட்டான் நிலைக்குத் தள்ளிவிடும் அபாயத்தையும் ஏற்படுத்த வாய்ப்புண்டு.
sam said this on December 3rd, 2008 at 1:20 pm
சிங்கள தமிழ் தேசிய வாதங்கள் மக்கள் பிரச்சனையை தீர்க்கப்போவதில்லை. இன ரீதியாக வரையறை செய்து மொழி கலாச்சாரம் பாரம்பரிய பிரதேசமென எல்லைகளை வகுத்துக்கொள்ளின் அந்த எல்லைகளுக்கு எல்லையே இல்லாமல் போகும். வடக்கு தமிழர் கிழக்கு தமிழர் மலையகத்தமிழர் முஸ்லிம்கள் கிழக்கு முஸ்லிம்கள் கொழும்பு முஸ்லிம்கள் பரங்கியர் மலேயர் கரயோர சிங்களவர் கண்டி சிங்களவர் வேடர் இன்னும் இத்தனையோ. அப்போ கலாச்சார எல்லைகள் தேச எல்லைகள் இவற்றை வகுப்பது எப்படி. அனைத்து சிறு பான்மை மக்களும் தமது உரிமைகளை பாதுகாக்க கூடிய வகையில் யாப்பு மாற்றமும்நடைமுறையில் அனைவரின் கலாச்சார சமூக வாழ்வுரிமைகள் பாதுகாக்கப்படும் என்ற வகையில் பன்மைத்துவ அரசாக இலங்கை வருவதற்கான தொடர்ந்த அரசியல் அழுத்தங்கள் மூலமாகவே இப்பிரச்சனை தீர்க்கப்படலாம். தமிழ் தேசியமானது சிங்கள தேசியம் போலவே தொடர்ந்து மற்றய மக்களின் அபிலாசைகளை புறக்கணிக்கிறது. அவர்களின் உரிமைகளை பறிக்கிறது. மற்றைய சிறுபான்மையினரை அன்னியப்படுத்துகிறது. எனவே இது தனது தார்மீகத்தை இழ்ந்து அரசியல் ரீதியாகவும் இராணுவரீதியாகவும் தோற்றுக்கொண்டிருக்கிறது.
ragavan said this on December 3rd, 2008 at 6:37 pm
ராகவன் -நீங்களும் சிவத்தம்பிசேரின்ர ஸ்ருடன்ரோ?
kumanan said this on December 5th, 2008 at 2:00 pm
//இந்த நிலையில்தான் நாம் தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வை முன்வைக்குமாறு அரசிடம் உரத்துக் கேட்க வேண்டியிருக்கிறது. இந்த நாட்டின் சட்டபூர்வமான அரசென்றும் அரசியல் சாசனத்திற்கமைய ஆட்சி நடத்தும் அரசென்றும் சொல்லிக்கொள்ளும் மகிந்த ராஜபக்சவின் அரசுக்கு அந்தக் கடமையிருக்கிறது. //
சிறிலங்கா சுதந்திரம் அடைந்த நாள் முதலா அங்க ‘சட்ட’பூர்வ அரசுகள் தான் இருந்து வந்துள்ளன.இந்த ‘சட்ட’ பூர்வ அரசுகளால் தான் தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்படு வந்துள்ளார்கள்.இதில் புதிதாக மகிந்த அரசு சோபாசக்தி கேட்டுப் போட்டார் அதால தீர்வைத் தாறம் எண்டு ‘சட்ட’ பூர்வமாச் சொல்லப் போகுதாம்.
//சிங்கள தமிழ் தேசிய வாதங்கள் மக்கள் பிரச்சனையை தீர்க்கப்போவதில்லை.//
அப்ப யார் தீர்க்கப் போகினம்?
//பன்மைத்துவ அரசாக இலங்கை வருவதற்கான தொடர்ந்த அரசியல் அழுத்தங்கள் மூலமாகவே இப்பிரச்சனை தீர்க்கப்படலாம்.//
அழுத்தம் யாரின் மீது பிரயோகிப்பீர்கள்? சிங்கள தமிழ் தேசிய வாதிகள் மீதா? அவை தானே தீர்க்க மாட்டினம் எண்டு முதல் வாக்கியத்தில் சொல்லிப்போட்டியள்? பிறகு நீங்கள் அழுத்தம் செய்தால் என்ன இல்லாடி என்ன?அமெரிக்கா , நோர்வே முதல் இந்தியா வரை எல்லாரும் தானே அழுத்தம் செய்யினம் ஒண்டும் நடந்ததாக் காணன்.அவைக்கு இல்லாத அழுத்தும் பவர் உங்கட்ட இருக்காக்கும்.
கட்டுரையில எழுதிற தீர்வு எண்டாலும் கொன்ச்சம் தர்க்க ரீதியா இருக்கட்டும். இல்லாடி இதையும் நாங்கள் பின் நவீனத்துவ மஜிக்கல் ரியலிசம் எண்டு எடுக்கிறதோ?
//சுந்தரவடிவேல் அன்ட் அற்புதன்
எந்த விமர்சனமுமமில்லாமல் புலிக்கு ஞாயந்தெண்டி இனத்தை அழிக்கும் உங்கள்கருத்துகளைவிட இவ்வாறான கட்டுரைகள் புண்ணியஞ்சேர்க்கும். புலியை விடவும் மற்றதெல்லாம் மோசம் எண்டது எங்களுக்கநதெரியும். ஆனா அதுக்கும் புலிதான் காரணம் எண்டா திரும்பவும் உங்களுக்கு அல்சர் வரும்.//
புலியைப் பற்றி விமரிசனம் செய்யிறது தான் முப்பது வருசமாச் செய்யிறியள், இன்னும் வயசு போன காலத்திலையும் உங்களுக்கு வேற என்னதைச் செய்ய ஏலும்?புலியை விமர்சித்தல் என்னும் வட்டத்தை விட்டு உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது என்பது எல்லோரும் அறிந்ததே.என்ர பலவீனக்கள்,தோல்விகள்,கஸ்ட்டங்கள் எல்லாத்துக்கும் கடவுள் தான் காரணம் எண்ட மாதிரி, புலிகள் தான் எல்லாத்துக்கும் காரணம் எண்டு புலிகளைக் கடவுள் ஆக்கிறது நீங்கள் தான், நான் அல்ல.
சிங்கள அரசு என்பது பேரினவாதத்தில் கட்டப் பட்டது.இலங்கைத் தீவில் இருக்கும் பிரதானமான முரண்பாடு தமிழ் சிங்களத் தேசியங்களுக்கு இடையேயானது.பிரதானமான முரண்பாடு தீர்க்கப் படாமால் ஏனைய முரண்பாடுகள் தீர்க்கப்படா.பேரினவாத்திற்கு எதிராக எழுந்ததே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம்.சிங்களப் பேரினவாத அரசைத் தோற்கடிப்பதற்கான தமிழ்த் தேசிய விடுதலை போரின் நோக்கம் தமிழருக்கான தன்னாட்ச்சி உடைய தமிழீழ அரசு.தமிழீழ அரசு உருவாகாமால் பேரினவாதம் அழியாது.பேரினவாதம் அழியாமால் சிங்களவர்,தமிழர்,இசுலாமியர், பெண்கள் ,தலித்துக்கள்,கொழும்புத் தமிழன் ,மட்டக்களப்புத் தமிழன், யாழ்ப்பாணத் தமிழன், தேசிய முதலாளிகள்,பாட்டாளிகள் எண்டு எவனுக்கும் விடுதலை இல்லை.
சாதிய சமய வேறுபாடுகளைக் கடந்த தமிழ்த் தேசிய அடையாளத்தின் அடிப்படையில் அமைந்த சம தர்மத் தமீழழத்தின் மூலமே அடக்கப்படும் சகலருக்குமான விடுதலை சாத்தியமாகும்.
அடக்கப்படும் சகல தரப்பினரும் தமிழ்த் தேசிய விடுதலைப் போரின் முன்னணிச் சக்திகளாக இருப்பதன் மூலமே தமக்கான விடுதலையை உறுதிப்படுத்த முடியும்.தமிழ்த் தேசிய விடுதலைக்கு முரணான எந்த நிலைப்பாடும் ஈற்றில் பேரினவாதத்திடம் ஒட்டி உறவாடி பேரினவாத்தின் பொம்மைகளாகி தம்மை அழித்துக் கொள்வதிலையே முடியும்.தலித்துக்களின் பெயரால் கிழக்கிலங்கை தமிழர்களின் பெயரால் நீங்கள் செய்ய வெளிக்கிட்ட புலி எதிர்ப்பு அரசியல் அதனாலையே இன்று மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்து உள்ளது.இப்போது இதிலிருந்து மீள இன்னொரு புலி எதிர்ப்புப் புள்ளியைத் தேடித் திரிகிறீர்கள்.
என்று நீங்கள் புலி எதிர்ப்பு என்னும் அரசியலைத் தூக்கி எறிந்து விட்டு ,மக்களை மைப்படுத்திய அரசியலைச் செய்கிறீர்களோ அன்று தான் உங்களால் உண்மையான மக்கள் விடுதலை பற்றி பேச முடியும்.
அற்புதன் said this on December 6th, 2008 at 9:25 am
ஓஹோ,
60 வருடத்திற்குப் பின்னரும் உருப்படியான மாகாணசபையை வைக்க முடியாத அரசாங்கத்திடம் எல்லாவற்றையும் கேட்டு வாங்கலாம் என்று சொல்கிறீர்கள். நடக்கட்டும் நடக்கட்டும்..
பிள்ளையானும் ஹிஸ்புல்லாவும் மாகாணசபையின் அதிகாரத்தைப் பற்றிக் கூறியது வாசிப்பது கிடையாது போலிருக்கு.
ஏகன் திரைப்படம் பார்க்க வேண்டும் என்று வந்த எஸ்.எம்.எஸ் ஐ தொலைபெசியில் வைத்திருப்பவனை பிடித்து ஜெயிலில் போட்டு வைத்திருக்கும் அரசாங்கத்திடம் பேசிப்பார்க்கலாம் என்கிறீர்கள்.
அண்ணளவாக 6000 தமிழர்களை விசாரணையின்றி சிறையில் வைத்திருக்கும் அரசிடம் பேசிப் பார்க்கலாம் என்கிறீர்கள்.
ராகவன் அண்ணாச்சி யாப்பு மாத்திறது களவாய் இரவில யாப்பு ஆபிசுக்க பூந்து அழிறப்பரால அழிச்சு எழுதிறது எண்டு நினச்சுக் கொண்டிருந்தா என்ன பண்றது?
சிங்கள தேசியம் போல ‘மற்றமைகளின்’ அரசியல் உரிமைகளை மறுத்த தமிழ்த்தேசியம் தோற்று ஓடுகின்றதாம். சிங்கள தேசியம் வெற்றிநடை போடுதே.
கடைசியில ராகவன், சோபாசக்தியின் அரசியல் ஆனந்தசங்கரியின் அரசியலாகப் போய்விட்டது. கடிதம் எழுதும் அரசியல்.
சோபாசக்திக்கு ஒரு பகிரங்க வேண்டுகோள்.
இந்தியாவில் ஆயுதம் ஏந்திய ஆயிரக்கணக்கான நக்சலைட்டுக்களுக்கு இந்தியா சென்று நீங்கள் ஆலோசனை செய்ய வேண்டும் இந்திய அரசாங்கத்தின் சார்பில். ராஜன் குறையும் கூட வருவார். போய் சொல்லுங்கோ இந்திய அரசாங்கம் பலமானது. அவர்கள் பக்கம் நின்றுதான் நாம் கதைக்க முடியும். எமது அரசியல் அப்பிடி. ஆகையால் நக்சலைட்டுக்களாகிய நீங்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் என விரும்புகின்றோம். இதுதான் எமது அரசியல் என்று சொல்லுங்கோ. ராஜன் குறை யாராவது அறிஞரின் கூற்று ஒன்றை உங்களுக்குத் தராமலா விடப்போகின்றார்.
இந்திய அரசாங்கத்தின் இந்துத்துவா இயந்திரத்தால் பாதிப்புற்ற இஸ்லாம் ந்ண்பர்களிடம் சென்று நீங்கள் ஆலோசனை சொல்ல வேண்டும்.
ஏலே.. ஏதோ நல்ல இருந்தா சரிலே..
உங்க வண்டியும் ஓடத்தானே வேணும்.
marathan said this on December 6th, 2008 at 9:27 am
அற்புதன்,
/கட்டுரையில எழுதிற தீர்வு எண்டாலும் கொன்ச்சம் தர்க்க ரீதியா இருக்கட்டும். இல்லாடி இதையும் நாங்கள் பின் நவீனத்துவ மஜிக்கல் ரியலிசம் எண்டு எடுக்கிறதோ?/
முதலில இப்பிடி லூசுத்தனமா எழுதிறதை நிறுத்தவும். பின்னவீனத்துவத்திற்கும் சோபாசக்தி குழுவுக்கும் என்ன தொடர்பு? என்னைப் பொறுத்தவரை ஒரு தொடர்பும் இல்லை என்பது எனது கருத்து.
பிரதான முரண்பாடு தீர்க்கப்பட்டா தான் மற்றது எல்லாம் தீர்க்கலாம் எண்ட உங்கட கதையை இனியும் தொடர்வது நல்லதல்ல.
பெருந்தேசியவாம் உள்ளடக்கும் அனைத்து வகையான உபபரப்புகளும் தமது விடுதலைக்கும் சுயநிர்ணய உரிமைக்கும் உரித்துடையன. உம்மைப்போன்றோர் இப்படி லூசுத்தனமாகப் பேசிக்கொண்டிருப்பதால் இன்றுவரைக்கும் சோபாசக்தி, ராகவன் போன்றோர் நின்றுபிடிக்கிறார்கள். அல்லது எப்பவோ காணாமல் போயிருப்பார்கள். சிலவேளை புலி கூட திருந்தியிருக்கும்.
புலி தலித்தியம் தொடர்பாகவோ தமிழ்த்தேசியம் உள்ளடக்கும் பரப்புகளின் சுயநிர்ணய உரிமை தொடர்பாகவோ எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. சோபாசக்தி, ராகவன் போன்ற புலியெதிர்ப்பு வருத்ததிற்கு மருந்து குடிப்போர் இத்தவறுகளை முன்னிலைப்படுத்தி காலம் தள்ளுகின்றனர். அவர்களின் அரசியலால் பாதிக்கப்படப்போவது சுயநிர்ணய உரிமை கோரும் சமூகப்பரப்புகளே. நீங்களும் புலி மாதிரிப் பேச வேண்டாம். மனுசர் மாதிரி பேசுங்கோ. அப்பதான் இந்த ரெண்டு பக்க முட்டாள்களும் திருந்துவார்கள்.
புலி தமிழ்த்தேசியத்திற்குள் உள்ளடங்கும் பரப்புகளை முறையாக அங்கீகரிக்கவில்லை என்பதற்காக புலி செத்து அழிந்து சிங்கள பேரினவதம் கொடுக்கப்போகும் உரிமைகளை எதிர்பார்த்து வரலாறு 50 வருடம் பின்னோக்கி கொண்டு செல்ல நாமொன்றும் சோபாசக்தி, ராகவன் போன்று முட்டாள்கள் அல்ல.
புலி எதிர்ப்பு என்பது கடைசியில் போய் நிற்கும் இடம் சிங்கள பேரினவாத இரகசிய ஆதரவு.
இதுதான் அனைத்து புலி எதிர்ப்பின் வரலாறு.
எமக்கு வேண்டிய தளம் அதுவல்ல.
புலி எதிர்ப்பாளர்கள் தான் தமது முட்டாள்தனம் புரியாமல் பேசுகின்றார்கள் என்றால் அதற்கு சற்றும் குறைவில்லாமல் நீங்கள் புலியின் சூத்துக்கை கொண்டுபோய் மூக்கை வச்சுப் போட்டுப் பேசுகின்றீர்கள்.
அற்புதன்,
உங்களைப் போறவர்களின் பேச்சினால்தான் இவங்கள் எல்லாம் மூளையை கழட்டி கோவணத்துக்கை வச்சுப்போட்டு மகிந்தவின் கவட்டுக்கை போய் நிண்டு குதிச்சு விளையாடுறாங்கள்.
தமிழ் அறிவுஜீவித்தளத்தின் மாற்றத்திற்கான காலம் இது. இங்கே நீங்கள் யாரும் இல்லை என்பது சோகம் தான்.
marathan said this on December 6th, 2008 at 2:25 pm
என்ன இருந்தாலும் சோபா நீங்கள் இந்தநேரத்தில தமிழ்நாட்டு சினிமாக்காரரை தாக்கியிருக்ககூடாது. தமிழகத்தின் எழுச்சி எண்று நாங்கள் புல்லரிச்சுப்போயிருக்கக்க ணீங்கள் உவ்வாறு சொறியக்ùடாது.
இன்றைய தமழிம் மக்களின்ர இந்றைய நிலைக்கு ஆர் காரணம்? அற்பதன் கொஞ்சம் கதைச்சால் நல்லம். ஒட்டுக்குழுக்கள்தான் எல்லாத்துக்கம் காரணம் எண்டு அவர்களை கடவுளாக்ககூடாது.
மாறிமாறி விளையாடும் இலங்கை அரசு உப்பிடித்தானிருக்கும்.
தமிழ் மக்களுடைய இந்த முப்பதுவருச அவலத்துக்கு புலிகளின் அணுகுமுறைகள் எப்படி காரணமாயிருந்திருக்கு எண்டது பற்றி நீங்கள் பகிரங்கமா கதைக்க ஏன் தயங்குறியள். ..
thiunaa said this on December 6th, 2008 at 2:26 pm
பேரினவாதம் அழியாமால் சிங்களவர்,தமிழர்,இசுலாமியர், பெண்கள் ,தலித்துக்கள்,கொழும்புத் தமிழன் ,மட்டக்களப்புத் தமிழன், யாழ்ப்பாணத் தமிழன், தேசிய முதலாளிகள்,பாட்டாளிகள் எண்டு எவனுக்கும் விடுதலை இல்லை
உண்மை தான். அதேபோல தமிழ் குறுந்தேசியவாதம் தமிழன் என்ற ஒற்றை அடையாளத்தை வைத்து அதில் அடங்காதவ்ர்களை அன்னியர்களாக துரோகிகளாக பார்க்கும் சிந்தனை முறையும்நடைமுறையும் இன்னொரு வகையில் பேரினவாத சித்தாந்தத்திற்கும் அரசியலுக்கும் முண்டு கொடுத்து காப்பாற்றிவருவதென்பதே யதார்த்தம். சிங்கள இனவாதமும் தமிழ் இனவாதமும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். தமிழ் தேசியவாத சிந்தனை முறையே அற்புதனின் அடிப்படை. இன வாத சிந்தனையிலிருந்து தமிழ் சிங்கள அரசியல் பரப்பு மீளாதவரை இப்பிரச்சனை தீராது.
ragavan said this on December 11th, 2008 at 7:10 pm
ராகவன் அண்ணாச்சி,
நீங்க சொல்லும் விசயங்கள் எல்லோருக்கும் தெரிந்தவை. நான் கேட்கும் கேள்வி என்னவென்றால் அதற்கு நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள் என்பதே.
சிங்கள பேரினவாதத்தையும் தமிழ் பேரினவாததையும் ஒரு தளத்தில் வைத்து அணுக முடியாது. ஒரே தளத்தில் வைத்து அணுகுபவர்களுக்கு ஒன்று சொல்கின்றேன்.
சிங்கள பேரினவாதம் நடைமுறையில் உள்ள இறமையுள்ள அரசாங்கத்தால் வழிநடத்தப்படுவது. அது ஐக்கிய நாடுகள் சபை யில் அங்கம் வகிக்கும் அரசாங்கம். ஆனால் தமிழ் பேரினவாதம் உலகத்தில் பல நாடுகளால் தடைசெய்யப்பட்ட இயக்கத்தால் வழிநடத்தப்படுவது. இதை ஒரே தட்டில் வைத்து அணுகும் போதும் ஒரே விதமாக விமர்சிக்க எத்தனிக்கும் போதும் அழியப்போவது தமிழ் பேரினவதமும் அதனோடு இணைந்தவையுமே. சிங்கள பேரினவாதம் வாழும். அது மேன்மேலுமான தனது நுண்ணரசியலுடன் தன்னை வாழ்வைக்கும்.
உங்களுக்குத் தேவை தமிழ் பேரினவாதத்தின் அழிவு மட்டுமேயெனில் நேரடியகவே நீங்கள் சொல்லலாம். இப்படி பூசி மெழுகத் தேவையில்லை.
அருமந்த அறிவுஜீவி ராஜன்குறை யையும் வீணாக்க வேண்டாம். பாவம் அந்த மனுசன். நீங்கள் எல்லாம் பாவம் எண்டு உங்களுக்காக கதைக்க வெளிக்கிட்டு நோண்டியாகுது.
ஏன் ஐயா இந்த கொலை வெறி? வேணாம் விட்டுடுங்க. நாங்க எல்லாம் பாவம்.
நீங்கள் எல்லாம் கீழேயுள்ள 2 இல் ஒண்டு.
1. முட்டாள்கள்.
அல்லது
2. வேண்டுமென்று வீம்புக்காக செய்பவர்கள்.
இதில் நீங்கள் எந்தவகை எனத் தீர்மானித்துக் கொள்ளுங்கள். இல்லை நாம மக்கள் போராளிகள், அறிவுஜீவிகள், கலகக்காரர்கள் எண்டு சொல்லி நமக்கு பூச்சுத்த வேண்டாம்.
ஏகன் படம் பார்க்க வேண்டாம் எண்டு எஸ்.எம்.எஸ் அடிக்கிறவனை கொண்டு போய் உள்ள வச்சிருக்கிற அரசாங்கம் நிர்மலா அக்காவை கொழும்புக்கு வர விடுது தானே.!
நீங்கள் நிக்கிற இடம் எதுவெண்டு அரசாங்கத்துக்கு தெரியுது உங்களுக்குத் தெரியேல்லை.
நீங்கள் சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக வேலை செய்யுங்கோ முதலில. அப்புறம் கேக்கிறோம் உங்கட கதைகளை.
ஆனா,
பிலி அழிஞ்சு இலங்கைக்கு போய் அரசியல் செய்யலாம் எண்டு மட்டும் கனவு காணாதையுங்கொ. புலி அழிஞ்சாலும் அது நடவாது.
marathan said this on December 12th, 2008 at 6:25 am
புல்லரிக்குதையா புல்லரிக்குது.
இத்தனை புத்திசாலிகள் தமிழில் உள்ளார்கள் எனபதை பார்க்க உடலும் உள்ளமும் புல்லரிக்குது.
புலிகள் தம் இயக்கத்தைக் கலைத்துவிட்டுச் சென்ற மறுகணமே இவர்கள் பிரச்சினைக்குத் தீர்வுகண்டு விடுவார்கள்.
புல்லரிக்குதையா புல்லரிக்குது.
இவ்வளவு புத்திசாலிகளும் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கைதான் தூக்கத்தையே தருகிறது. புலிகளை நம்பினால் அம்போதான்.
புல்லரிகுதையா புல்லரிக்குது.
suriyan said this on December 13th, 2008 at 9:21 am
//அதேபோல தமிழ் குறுந்தேசியவாதம் தமிழன் என்ற ஒற்றை அடையாளத்தை வைத்து அதில் அடங்காதவ்ர்களை அன்னியர்களாக துரோகிகளாக பார்க்கும் சிந்தனை முறையும்நடைமுறையும் இன்னொரு வகையில் பேரினவாத சித்தாந்தத்திற்கும் அரசியலுக்கும் முண்டு கொடுத்து காப்பாற்றிவருவதென்பதே யதார்த்தம்.//
இராகவன் முதலில் நீங்கள் என்ன சொல்கீறீர்கள் என்பதை விளங்கிக் கொள்வோம்.
குறுந் தேசிய வாதம் என்றால் என்ன? பரந்த தேசியவாதாம் என்றால் என்ன?
தமிழன் என்னும் தேசிய அடையாளம் எவ்வகையில் குறுந் தேசிய வாதம் ஆகிறது? உங்களின் பரந்த தேசிய அடையாளத்தை எவ்வகையில் அழைக்கிறீர்கள்,வரையறை செய்கிறீர்கள்?
//சிங்கள இனவாதமும் தமிழ் இனவாதமும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். //
சிங்கள தேசிய வாதம் முழுத் தீவையும் தனதாகக் கருதுகிறது.தமிழர்கள் வந்தேறிகள் என்று சொல்கிறது.சிறுபான்மையினருக்கு எந்த உரிமைகளும் கிடையாது என்று சொல்கிறது.ஆனால் தமிழ்த் தேசிய வாதாம் தமிழரும் சிங்களவரும் இந்தத் தீவின் பூர்வ குடிகள் என்று சொல்கிறது.சிங்களவரைச் சிறுபான்மையினர் என்றோ அவர்களுக்கு உரிமைகள் கிடையாது என்றோ சொல்ல வில்லை.இரண்டையும் எவ்வகையில் ஒன்று என்று சொல்வீர்கள்?
//தமிழ் தேசியவாத சிந்தனை முறையே அற்புதனின் அடிப்படை.//
அற்புதன் தமிழத் தேசிய வாதம் தோன்றியதற்கான அடிப்படை சிங்களப் பேரின்வாதம் என்னும் வரலாற்றுப் புரிதலில் இருந்தும், நடைமுறையில் சிங்களப் பேரின்வாதத்தால் அடக்கப்படும் மக்களின் உணர்வு நிலையில் இருந்துமே எனது கருதுக்களைச் சொல்கிறேன்.மக்களின் உணர்வுகளைத் துயரங்களைப் பிரதிபலிக்காத உங்கள் கற்பனையான குழம்பிய நிலைப்பாடுகள், எப்போதுமே உங்களை மக்களிடம் இருந்து அன்னியப்பட்டே வைத்திருக்கும்.
//இன வாத சிந்தனையிலிருந்து தமிழ் சிங்கள அரசியல் பரப்பு மீளாதவரை இப்பிரச்சனை தீராது.//
இப்படி சொல்லி விட்டுச் செல்வதால் பிரச்சினை தீருமோ? இனவாதச் சிந்தனை என்பதையும் தேசியச் சிந்தனை என்பதையும் குழப்பிக் கொள்கீறீர்கள்.இனவதாம் என்பது எனது இனமே சிறந்தது என்னும் நிலையில் ஏற்படும் ஒடூக்குமுறைச் சிந்தனை.தேசியம் என்பது ஒரு குழும மக்கள் தங்களை ஒரு பொதுவான கலாச்சாராம் வரலாறு மொழி என்பனவற்றின் அடிப்படையில் ஒன்றாக் உணர்வது.தங்களின் அடையாளத்தை இன்னொரு இனத்தின் இனவாத ஒடுக்குமுறையில் இருந்தும் பாதுகாக்க போராடுவது தேசிய இன விடுதலைப் போராட்டம் ஆகிறது.
இங்கே நீங்கள் இசுலாமியத் தமிழர்களையும் தலிதுக்களையும் தமிழர் என்னும் அடையாளம் ஒடுக்கவில்லையா என்று கேள்வி எழுப்பலாம்.இதில் தமிழர்கள் என்னும் அடையாளாத்தின் அடிப்படையில் தலிதுக்கள் மீதோ இசுலாமியர் மீதோ ஒடுக்குறை நிகழ்கிறதத என்று பார்க்க வேண்டும்.அவ்வாறு நிகழ்ந்தால் அதற்கான எதிர் வினையான அரசியற் போராட்டங்கள் இயக்கங்கள் தோன்றி இருக்க வேண்டும்.அவ்வாறு எங்கே தோன்றி உள்ளது? புலத்தில் நீங்கள் உருவாக்க முற்பட்ட அமைப்பும்,கிழகிலங்கை முன்னனி பிள்ளையான் கருணா என்போரின் பிரதேச வாத அரசியலும் ஏன் சிரழிந்தது? இவற்றிற்க்கு மக்களிடம் இருந்து ஆதரவு கிடைத்ததா? முதலில் தலித்துக்கள் என்னும் போது அவர்கள் தமிழர்கள் இல்லையா? இல்லை என்றால் ஏன் சிங்களப்பேரின்வாதம் அவர்களையும் ஒடுக்கிறது? சிங்களப் பேரின்வாததின் பார்வையில் தலிதுக்களும் கிழக்கு மாகணத் தமிழர்களும் தமிழர்களே.இசுலாமியத் தமிழர்களையும் மலையகத் தமிழர்களையும் சிங்களப் பேரினவதம் ஒடுக்கிறது.
இங்கே தமிழர்கள் யார் என்பதை சிங்களப் பேரினவாத ஒடுக்குறையே அடையாளப் படுத்துகிறது.சிங்களப் பேரின வாதத்தை
தோற்கடிக்கும் தமிழத் தேசிய விடுதலைப் போராட்டாத்தில் இணைவதன் மூலம், அரசியல் அதிகாரத்தைப் போராடும் சக்திகளால் ஏன் தக்க வைக்க முடியாது.யாழ் வேளாள மேலாதிக்கம் என்பதில் இருந்து தமிழ்க் குறுந் தேசிய வாதம் உருவாகியது.அந்த அடையாளமே இப்போதும் இருப்பதாகவோ அந்த அடியாளத்தைப் பாதுகாத்த நிறுவனங்களே இப்போதும் இருப்பதாகவோ எதன் அடிப்படையில் முடிவு செய்கிறீர்கள்?
சிங்களப் பேரின்வாதமும் நாற்பதாண்டு ஆயுதப் போராட்டமும் , தமிழ்க் குறுந் தேசியவாத அடையாளத்தைப் பரந்து பட்டதாக் மாற்றி அமைத்துள்ளது.அதனலையே தமிழத் தேசிய விடுதலைப் போராட்டம் அனைவரையும் உள் வாக்கி இருக்கிறது.உள் வாகியதன் மூலம் தமிழ்த் தேசிய அடையாளம் மாற்றம் பெற்றுள்ளது.
கடந்த காலாங்களில் தமிழ் இசுலாமிய மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறையில் இருந்து தமிழத் தேசிய விடுதலைப் போராட்டம் பாடங்களைக் கற்றுள்ளது என்றே நம்புகிறேன்.தமிழத் தேசிய அடையாளம் என்பது நிலையானது அல்ல.போராட்டச் சூழல் சமுக நிலமைகளுக்கு ஏற்ப மாற்றம் அடைவது. உலகில் பிழையே விடாத மனிதர்களும் இல்லை பிழைவிடாத போராட்டமும் இல்லை.
ஒடுக்கும் சிங்களப் பேரினவாததையும் அதற்கு எதிர் வினையாக எழுந்த தமிழ்த் தேசிய விடுதலைப் போரட்டததையும் ஒன்றே என்று கூறுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை.
அற்புதன் said this on December 13th, 2008 at 9:32 am
இன்னொன்றையும் சொல்ல வேண்டும்,
தமிழத் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான நிலையில் இருக்கும் எந்த இயக்கமும், தனி நபரும் ஈற்றில் ஒடுக்குறையாளர் பக்கமே செல்ல வேண்டி இருக்கும், அவ் வகையிலையே அவர்களை மக்கள் பார்ப்பார்கள்.எந்த மக்களுக்காகக் குரல் கொடுப்பதாகக் கூறுகிறீர்களோ அவர்களிடம இருந்தே இலகுவில் அன்னியப்பட்டு விடுவீர்கள்.
அதனால் தான் சொல்கிறேன் உங்களின் அரசியல் நிலைப்பாடுகள் புலி எதிர்ப்பு என்னும் ஒற்றைப் பரிணாமத்தில் இருந்து உதிர்ந்தவை.அடக்கப்படும் மக்களின் நலனில் இருந்து வருபவை அல்ல.தமிழ்த் தேசிய விடுதலை என்னும் இலக்கினுள் பல்வேறு சக்திகள் இயங்குகின்றன் என்பதே யதார்த்தம்.
அற்புதன் said this on December 13th, 2008 at 9:33 am
அற்புதன் அசத்திட்டீங்கள். கை குடுங்கோ.
naachchiyaar said this on December 13th, 2008 at 9:34 am
ஏகன் திரைப்படம் பார்க்க வேண்டும் என்று வந்த எஸ்.எம்.எஸ் ஐ தொலைபெசியில் வைத்திருப்பவனை பிடித்து ஜெயிலில் போட்டு வைத்திருக்கும் அரசாங்கத்திடம் பேசிப்பார்க்கலாம் என்கிறீர்கள்//marathan
ஏகன் படம் பார்க்க வேண்டாம் எண்டு எஸ்.எம்.எஸ் அடிக்கிறவனை கொண்டு போய் உள்ள வச்சிருக்கிற அரசாங்கம் ….//அற்புதன்
ஏகன் திரைப்படம் பார்க்க வேண்டும் எண்டு எஸ்.எம்.எஸ் அடிக்கிறவனையும் கைது?
ஏகன் படம் பார்க்க வேண்டாம் எண்டுஎஸ்.எம்.எஸ் அடிக்கிறவனையும் கைது?செய்யும்
சிங்களப் பேரினவாத(!)அரசு .அற்புதம்…அற்புதம்…உண்மையறியும்அற்புதம்…
simbu said this on December 13th, 2008 at 8:01 pm
சிம்பு என்னும் நண்பருக்கு அற்புதன் ஏகன் பற்றி எதுவுமே எழுதாமால் ,அற்புதம் அற்புதம் என்பதில் ஒரு பிரியோசனமும் இல்லை.இப்படியான எந்தவித பிரியோசனமும் அற்ற பின்னூட்டங்களை எழுத முதல் , யார் , யார் என்ன என்ன எழுதுகினம் என்பதை ஆறுதலா வாசிக்கப் பழகுங்கோ.
அற்புதன் said this on December 14th, 2008 at 1:04 am
Oh my dear simbu,
U r really genious…
/ஏகன் திரைப்படம் பார்க்க வேண்டும் என்று வந்த எஸ்.எம்.எஸ் ஐ தொலைபெசியில் வைத்திருப்பவனை/
sorry bro.. its miss fire..
ஆழமான வாசிப்பு என்பது இதுதானோ?
ரெண்டையும் எழுதினது மரதனே தான்.
அற்புதன்,
அட்டற்றா நாக்கு மூக்கா நாக்கு மூக்கா நாக்கு மூக்கா…
marathan said this on December 14th, 2008 at 4:20 am
இந்த இடத்தில ஒருவிடயம் சொல்ல ஆசைப்படுகின்றேன்.
2002 ஆண்டின் பிற்பகுதியில் இந்திய பி.ஜே.பி யும் புலிகளும் ஒரு பேசுவார்த்தையில்
ஏடுபட்டனர். அதை புலிகளின் தீவிர விசுவாசியும் இந்திய முன்னாள் பாதுகாப்பு மந்திரியும்
ஆன ஜோர்ஜ் பெர்னான்ட்ஸ் அவர்கள் ஒழுங்குபடுத்தினார்கள். ஜோர்ஜ் பெர்னான்ட்ஸ் இன்
புலி ஆதரவால் அவரால் அமைச்சராக இருந்த காலத்தில் எதையும் சாதிக்க
முடியவில்லை. அப்பேச்சுவார்த்தையின் முக்கிய பகுதியாக இருந்த ஒரு விடயம்
பேசப்பட்டது. அது என்னவென்றால் தமிழ்நாட்டு அரசியலால் இவ்விடயத்தில் தீர்வு
எதனையும் எட்ட முடியாது. ஈழத்து அரசியலை இந்திய தேசிய அரசியலோடு இணைக்க
வேண்டும் என்பதே அது. அதற்கான வழியாக அவர்கள் கூறியது ஈழத்தில்
பெரும்பாலானவர்களாக இந்துக்கள் இருக்கின்றபடியால் மதப்பிரச்சனையாக அதனை
முன்னெடுக்க முடியும் என ஜோர்ஜ் பெர்னான்ட்ஸ் ஆல் தெரிவிக்கப்பட்டது. அதற்கு
புலிகள் தரப்பில் இருந்து அன்டன் பாலசிங்கத்தால் கடுமையான மறுப்பு தெரிவிக்கப்பட்டது
மட்டுமல்லாமல் அவ்விடயம் சார்ந்து இனிமேல் பேச முடியாதெனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புக்கள் இதன் பின்னால் இருந்ததாகவும் சொல்லப்பட்டது.
தேசிய விடுதலைப் போராட்டம் மத அடிப்படைவதமாகப் போகும்பட்சத்தில் அது
கருத்தியல் ரீதியாக பலத்த பின்னடைவுகளைச் சந்திக்கும் என்று கூறப்பட்டது.
அதுமட்டுமில்லாமல் ஏற்கன்வே முஸ்லிம்கள் தொடர்பில் தவறிழைத்த புலிகள்
இவ்விடயத்தைச் செய்யத் தயாராக இருக்கவில்லை.
ஆனால், இன்று கேணல் ஹரிகரன் போன்றோர் பிரபாகரன் இப்போரில் வெல்வாராயின்
அவர் மந்திரவாதியே என்று கூறும் தருணத்தில் அதாவது புலிகளின் இயலாமையான
நேரத்தில் ஒரு விடயம் நடந்திருக்கிறது. அதை யாரும் பெரிதாகக் கவனிக்கவில்லை. அது
ஈழத்தில் அழிந்து போன கோயில்களின் பட்டியலை சிவாஜிலிங்கள் அவர்கள் ஜெயேந்திர
சங்கராச்சார்ய சுவாமிகளை அவர்களிடம் கையளித்த நிகழ்வே அது. புலிகள் தமது இறுதி
ஆயுதத்தை தூக்கத் தயாராகின்றனர்.
இதில் கவனிக்க வேண்டிய வேண்டிய விடயம் என்னவென்றால், ஈழத்தில் இறப்பவன்
இந்து என்பதா அல்லது அவனது அடையாளங்களில் ஒன்று இந்து என்பதா என்பதே.
புலிகள் இவ்விடத்தில் தெளிவாக இருக்க மாட்டார்கள் எனவே
கவலைப்படவேண்டியுள்ளது. திராவிட, தலித் சக்திகளைக் கூட ஒன்றிணைக்க முடிந்த
புலிகள் இவ்விடத்தில் அவர்களைத் தவறவிடப்போகின்றார்களா அல்லது அவர்களையும்
அணைத்து இந்து அடையாளத்தையும் சுமக்கப் போகின்றார்களா என்பதே.
சோபாசக்திக்கும் சுகனுக்கும் இனிமெல் பரந்த மைதானம் கிடைக்கப் போகின்றது. நன்றாக
அடித்து ஆடலாம். சோபா தனது அரசியலை இன்னும் விரிவுபடுத்தலாம். சுகன் இனிமேல்
எதை எழுதினாலும் அது முற்போக்கானதாகவே இருக்கப் போகின்றது. ஈழத்தில் இறக்கும்
யாருக்காகவும் கவலைப்படும் கட்டத்தை சோபா, சுகன் கடந்து காலங்கள் போய்விட்டன.
இப்போது அவர்களுக்கு இருப்பதெல்லாம் தமது புகழும் அதிகார ஆசையுமே. அதற்குப்
புலிகளே களமமைத்துக் கொடுக்கப் போகின்றார்கள்.
சோபா,சுகன் போன்றோருக்காக ஒரு பாடல்.
அட்டற்றா
நாக்கு மூக்கா நாக்கு மூக்கா
நாக்கு மூக்கா நாக்கு மூக்கா
புலி செத்தா சோபா தின்னான்
தோலை வச்சு மேளம் கட்டி
அட்டற்றா
நாக்கு மூக்கா நாக்கு மூக்கா
நாக்கு மூக்கா நாக்கு மூக்கா
தலித் செத்தா சுகன் தின்னான்
தோலை வச்சு மேளம் கட்டி
அட்டற்றா
நாக்கு மூக்கா நாக்கு மூக்கா
நாக்கு மூக்கா நாக்கு மூக்கா
வன்னியில தேசியம் நிக்குது
கிழக்கில பிரதேசவாதம் நிக்குது
கிளிநொச்சிக்கு கிட்ட ஆமி நிக்குது
முல்லைத்தீவு கடற்கரையில புலி நிக்குது
ஊரெல்லாம் சவம் புடிச்ச தமிழ்சனம் நிக்குது
வேட்டையாடிப் புடிங்கடா
வேகவச்சுத் தின்னுங்கடா
அட்டற்றா
நாக்கு மூக்கா நாக்கு மூக்கா
நாக்கு மூக்கா நாக்கு மூக்கா
இரத்தச் சோடா இரத்தச் சோடா
இரத்தச் சோடா இரத்தச் சோடா
இரத்தச் சோடா இரத்தச் சோடா
இரத்தச் சோடா இரத்தச் சோடா
அட்டற்றா
நாக்கு மூக்கா நாக்கு மூக்கா
நாக்கு மூக்கா நாக்கு மூக்கா
marathan said this on December 15th, 2008 at 10:37 am
அண்ணே கருப்புத்திரையில் வெள்ளை எழுத்துக்களை வாசிக்க என்னை மாதிரி இளைஞர்களுக்கே கண் வலி எடுத்து விடுகிறது. பெருசுகளால் சமாளிக்க முடியாது. தயவுசெய்து அடைப்பலகையின் வண்ணத்தை மாற்றுவது குறித்து பரிசீலிக்கவும். தாவு தீருகிறது
லக்கிலுக் said this on December 15th, 2008 at 11:24 am
நண்பர் மரதன்!
இவ்வளவு அப்பாவியாகவா ஒருவர் இருக்கமுடியும்.
இலங்கையின் முழுச் சமூகமுமே ராணுவ ஆய்வாளர்களாக மாறிவிட்ட நிலையில் எங்கேயோ அன்னிய தேசத்தில் அகதிகளாகக்கிடக்கின்ற ஓரிருவரின் அங்கலாய்ப்புகளில் என்ன இருக்கமுடியும்.
சுத்தமான அரசியற்கறைகள் ஏதும் விழாத இராணுவ அமைப்பை இந்துத்துவம்,ஆர்.எஸ்.எஸ். என்று அலைக்களித்துக் கொண்டுபோய்க் கட்டிப்போடுவதில் ஆரும் ஏமாறலாம்.புலிகள் ஏமாறப்போவதில்லை. உள்ளூர்,தேசிய சர்வதேசிய அரசுகள் அமைப்புகள் அறிஞர்கள் ஆளுமைகள் அதிகாரங்கள் ஆளணிகள் ஆதியோடந்தமாக அவர்களை ஆட்டித்தான் பார்த்தார்களே!
பிரபாகரனா கொக்கா!
போடாதே எனக்குத் தாழ்ப்பா தாழ்ப்பா! என்றவர் இன்னும் முப்பது வருடத்திற்குத் தன்னைத் தகவமைத்துக்கொண்டுள்ளார் தலைவர்.
தமிழ்ச் சமூகத்திலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள அவ்வப்போதும் தொடர்ச்சியாகவும் அதனது அவசங்களை அது திருப்திப்படுத்த வேண்டியுள்ளது. தற்காப்பும் தகவமைப்பும் என்பது துப்பாக்கியால் எதிரியைக் குறீபிசகாது சுட்டுக்கொண்டே இருப்பது என்பதான அனுமானங்கள் அப்பாவிகளுக்குப் பொருந்தலாம்.
ஒரு சிறிய உதாரணத்தால் உங்களுக்கு இதை விளக்கமுடியும்.
புலிகளின் விமானப்படை வெள்ளோட்டத்தில் வற்றாப்பளை அம்மன் கோவிலில் புலிகள் கொண்டுபோய் ஏன் விமானத்தால் அம்மனுக்குப் பூத்தூவவேண்டும்?
அந்தோனியார் சேர்ச்சில் ஏன் தூவக்கூடாது? தூவவில்லை?
அந்தோனியார் சேர்ச்சில் தூவியிருந்தால் புலி புலியாக இருந்திருக்கமுடியுமா,
sugan said this on December 16th, 2008 at 5:05 am
இங்கே தொழிற்படுவது தற்காப்பு - தகவமைப்பு.
இதை அவசரமாக ஒருவர் ஆ!!ஆகா!! புலிகள் இந்துத்துவ அமைப்பு என்று அவசரப்பட்டு முடிவெடுத்துவிடக்கூடாது.வற்றாப்பளை அம்மனுக்கு புதுவை இரத்தினதுரையின் வற்றாப்பளை அம்மன் தாயே! என்று பக்திப்பாடல் பாடியதையும் தகவமைப்புடன் நோக்கவேண்டும்.
sugan said this on December 16th, 2008 at 5:14 am
அந்தோனியார் சேர்ச்சில் புலிகள் பூத்தூவுவதைக் கற்பனைபண்ணுவதே அச்சந்தருவதாக இல்லையா?
அம்மனுக்குப் பூத்தூவுவது இயல்பாகத்தனே இருக்கிறது!
என்னசொன்னீர்கள் தேசிய விடுதலையா?
sugan said this on December 16th, 2008 at 5:38 am
சுகன்;
கிட்டு அடைக்கலமாதா சேர்ச்சுக்குப் போய் விட்டுத்தான் சண்டைக்குப் போவாரென யாழ்ப்பாணத்தில் கதைப்பார்கள்.சைவம் வேதம் என்பதாக ஒப்பிடுவதைவிட வேறு மாதிரி ஏதாவது உதாரணம் சொல்லலாம்.
tharmini said this on December 17th, 2008 at 10:07 am
ஓஹ்..
சுகன் உங்களைப் போல புத்திசாலிகள் தானே தலித் மக்களின் விமோசனத்துகுக்காக போராடுகின்றீர்கள். பிரான்சில் இருந்து நீங்கள் போராடுவதால் தானே நாமெல்லாம் உயிர்வாழகூடியதாக இருக்கின்றது. அதற்காக உங்களுக்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம். அதனாலேயே நாம் உங்களை நாடி வருகின்றோம்.
சிவனேசன் எம்.பி இன பேறா மகனுடன் தண்ணி அடிக்கும் நேரம், சுகனின் ஆர்டிகள் பற்றி எடுத்துக் கூறிய போது அவன் சாராயப் போத்திலால எனக்கு அடிச்சான் பாருங்க ஒரு அடி. அன்னிக்கு தான் சுகன் உங்கள் அதிபுத்திசாலித்தனம் விளங்கிச்சு. நீங்கள் ஜீனியஸ்பா.
சுகனா?
அவரு யாரு.?
புலியின் வாலைப் புடிச்சு சுழட்டி அடிச்சவராச்சே.
அவரு அடிச்ச அடியிலை தானே புலி போய் முல்லைத்தீவில விழுந்தது.
ஆனா, சுகன் நீங்கள் ரயாகரனோட சேர்ந்து கண்டுபிடிப்புகள் செய்ய வேண்டியவர். சத்தியக் கடதாசியில இருந்து வீணாகக் கூடாது.
marathan said this on December 17th, 2008 at 10:10 am
இனிய தர்மினி!
இது சைவ -வேதாகம குறியீடுகளுடன் புலிகளை உரசிப் பார்ப்பதோ தார தம்மியம் பார்ப்பதோ அல்ல.
நண்பர் மரதனின் கருத்தோட்டதில் இந்துத்துவ அடையாளத்தையும் புலிகள் நாளை சேர்த்துச்சுமக்கக்கூடும் என்பதான எதிர்பார்ப்புகளிற்கு அல்லது ஊகங்களிற்கு மதிப்பளித்து அவருடன் நடத்தும் உரையாடல் அவ்வளவே.
புலிகளின் தகவமைப்பு இப்போதுதான் நெருக்கடிகளைச் சந்திப்பதாகவும் தேவைப்படும்போதோ நெருக்கடிகளிற்காளாகும்போதோ அடையாளங்களுடன் அவர்கள் உறவுகொள்வதான தோற்றப்பாட்டிற்கான எனது கருத்து.
மேலும் விளக்குவான்வேண்டி ஒரு அபத்த உதாரணத்தைத் தரலாம்.
வடமாகாண முஸ்லிம் பெருமக்களை துரத்தியபோது புலிகளுக்கு அதன் எதிர்விளைவுகள் தெரியாதா என்ன?
தெரியுமே. அவர்களால் அதைத் தவிர்க்கமுடியாது. இல்லையேல் புலி புலியாக இருக்கமுடியாதே! நாளை புலிகளின் அரசியற்துறைப்பொறுப்பாளராக நடேசன் இடத்திற்கு முஸ்லிம் அன்பர் வரக்கூடும். ஆனால் புலிகளின் அடிப்படை அமைப்பு மாறாது.
மாத்தையாவின் துன்பியல் முடிவில் அதன் அமைப்புக்கட்டமைப்பை புரிந்துகொள்ளவும்.
sugan said this on December 17th, 2008 at 11:20 am
சுகன்,
உங்கட புத்திசாலித்தனத்தை சத்தியக்கடதாசியில் நாங்கள் கண்டு மகிழ்ந்ததைப் போல உங்களது வீரத்தையும் கண்டு மக்ழ்ந்திருக்கிறோம் தமிழச்சியின் தளத்தில். அதே நேரம் உங்களது புகழை தேசம் தளத்தில் கண்டு மகிழ்ந்திருக்கின்றோம்.
சிவனேசம் எம்.பி யின் பெறா மகனுக்கு சுகனது இந்த பின்னூட்டத்தை வாசித்துக் காட்டிய போது அவன் தர்மினியின் பின்னூட்டத்தையும் பார்த்துவிட்டான்.
அவன் சொன்னான் அடைக்கலமாதா சேர்ச்சிற்குள் இயேசு இல்லை. அங்கே ஒரு பிள்ளையார் சிலை வைக்கப்பட்டிருக்குதாண் எண்டு. சுகனிடம் கேட்டுச் சொல்லச் சொன்னான்.
சுகன், இவன் சொல்லுறது உண்மையோ?
marathan said this on December 17th, 2008 at 11:50 am
உணர்ச்சிகளை மட்டுமே முன்னிறுத்தி வரும் பதிவுகளுக்கிடையில் நீண்ட சிந்தனைகளுக்குரிய வினாக்களுக்குடைய பதிவும்,வாதப் பிரதிவாதங்களும் இத்தனை நாட்களும் எங்கேய்யா கண்ணுக்கு மாட்டாமப் போனிங்கன்னு எழுத வைக்குது.
ராஜநடராஜன் said this on December 17th, 2008 at 12:29 pm
சுகன்,
புதிய செய்தி கிடைத்துள்ளது.
/இதேவேளை இலங்கையின் தமிழர்களுக்கு ஆர் எஸ் எஸ் மற்றும் விஸ்வ ஹிந்து பரிசத் ஆகிய இந்து அமைப்புகள் தமது ஆதரவை வெளியிட்டுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்./
ராஜநடராஜன்,
உங்கள் புல்லரிப்பை பார்த்து எமக்கும் புல்லரித்துவிட்டது. உங்கள் அறிவைத் தொடர்ந்து மேம்படுத்தவும். உங்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு.
marathan said this on December 17th, 2008 at 9:06 pm
புலிகளின் விமானப்படை வெள்ளோட்டத்தில் வற்றாப்பளை அம்மன் கோவிலில் புலிகள் கொண்டுபோய் ஏன் விமானத்தால் அம்மனுக்குப் பூத்தூவவேண்டும்?//
செவி வழிக் கதைகளை எண்ணக்கருத்துருவாக்கத்துக்கு பயன்படுத்துவது மகாவம்சத்தை சிங்களது துணைக்களைப்பதைப் போன்றது.
புலிகள் முள்ளியவளை துயிலுமில்லத்தில்தான் மலர் தூவினார்கள். அது விமானமும் அல்ல. கிளைடர்.
வற்றாபளையில் மலர் தூவினார்கள் என்ற கதை நமது புலிவால்களால் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டது. சாதியொண்டு இல்லைத்தான்…. ஆனா மதம் இருக்கென இன்னமும் மதத்திலிருந்து விடு படமுடியாத (சாதியிலிருந்தும் விடுபடவில்லை) நமது சைவ சாமியார்கள் புலியை சைவத்தோடு இழுக்கும் முயற்சியாக கதைகளை கட்ட அது சுகனை போன்றவர்களுக்கு வாய்ப்பாகி விடுகிறது.
உண்மையில் அவ்வாறான புலி வால்கள் உள்ள வரைதான் சுகன் போன்றவர்களுக்கு இருப்புண்டு.
Son of Koluvi said this on December 17th, 2008 at 9:08 pm